இலக்கிய நிழலில் இளைப்பாறலாம்! -(5) கம்பருக்கு உதவிய சடையப்ப வள்ளல்/ முத்துநாயகம்
1 min read
Relax in the literary shade!- (5) By Muthunayagam
21-8-2020
அந்த ஊர், இயற்கை வரைந்த ஓவியம் போல் இருந்தது!
ஊர்க்கோடியில் நீர் நிரம்பிய ஒரு குளம், தலையெல்லாம் தாமரை மலர்களைச் சூடிக்கொண்டு நின்றது!
மதியம் சாயும் வேளை! கதிரவனின் கதிர்கள் ‘சுள்’ளென்று உறைத்தது.
மேய்ச்சலுக்கு சென்ற எருமைகள் அந்தக் குளத்தில் விழுந்து இதமாக நீந்திக்களித்தன!
தண்ணீரில் நிறைந்து கிடந்த, விரால் மீன்கள் துள்ளிக் குதித்தன.
எருமைகளின் அடிமடியில் போய் அந்த மீன்கள் முட்டிமோதின!
அவ்வாறு மோதுவது தமது கன்றுகள்தாம், என மயங்கிய எருமைகளோ, அவைகளுக்குப் பாலைச் சுரந்து நின்றன!
அடடே..! அது மட்டுமா?
பாலைச் சொரிந்துகொண்டே, தெருவின் வழியாக தத்தம், வீடுகள்வரை அந்த எருமைகள் செல்ல, தெருவெல்லாம் பால் ஓடுகிறது…!?
ஆகா…!
அத்தகைய வளங்கொண்ட, அந்த ஊரின் பெயர்தான், திருவெண்ணெய்நல்லூர்.(தற்போது அந்த ஊர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. சுந்தரை சிவபெருமான் ஆட்கொண்ட திருத்தலமும் இதுதான்)
அந்த ஊரில் சடையப்பர் என்றோர் வள்ளல் வாழ்ந்து வந்தார். பெரிய செல்வந்தர்.
வறுமையில் வாடி வருபவர்களுக்கு வாரிக்கொடுக்கும் ஈகைமனம் கொண்டவர்.
அடையா நெடுங்கதவிற்கும், அஞ்சேல் என்ற சொல்லுக்கும் சொந்தக்காரர்.
அவரது வீட்டுக் கதவிற்கு பூட்டே இல்லை! இராப்பகலும் திறந்தே இருக்கும்.
வாடி வருவோரை ‘வருந்த வேண்டாம்!’ என்று அபயக்கரம் நீட்டி அரவணைக்கும் அவரது, கருணைக் கரங்கள்!
கம்பன் என்ற கவிச் சக்கரவர்த்தியை தமிழுக்கு காத்துத்தந்ததும்; உணவு, உடை, கல்வியென அவருக்கு ஊட்டியதும், அந்தச் சடையப்பர் கரங்களே!
இராமாயணத்தை கம்பர் எழுதுகிறபோது நூறு பாடல்களுக்கு ஒருமுறை சடையப்பர் பெயரை குறிப்பிட்டாராம். அதை விமர்சித்த புலவர்களோ, “ஆயிரம் பாடல்களுக்கு ஒரு முறை குறிப்பிட்டால் போதாதா?” என்று கேட்டனராம்.
“ஆம்! சடையப்பர் நூற்றில் ஒருவர் அல்லர். ஆயிரத்தில் ஒருவர்தான்!” என்று அவ்வாறே ஆயிரம் பாடல்களுக்கு ஒருமுறை குறிப்பிட்டாராம்!
சடையப்பர் மேல் அத்தகைய அளவற்ற அன்பைக் கொண்டவர், கம்பர்.
அதுபோல் கம்பர் மீதும் அவரது தமிழ் மீதும் சடையப்பரும் அளப்பறிய காதலைக் கொண்டிருந்தார்.
எப்பொழுதும் அவரது இல்லத்திற்கு வந்து போகும் கம்பர், சில காலமாய் வரவில்லை.
இது சடையப்பருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. உடனே கம்பரைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினார்.
அப்பொழுது காதுகளில் வந்துவிழுந்த செய்தி, அவருக்குக் கொஞ்சம் கவலையைத் தந்தது.
வல்லி என்ற தாசியின் அழகில் மயங்கிய கம்பர், அவளே தஞ்சம் என்று ஒற்றியூரில் தங்கியிருக்கிறார் என்பதே அந்தச் செய்தி!
அது அதிர்ச்சியை தந்தபோதிலும், கம்பரையும் அவரது கவித்திறனையும் விரும்பியதால், தனிப்பட்ட அவரது வாழ்க்கையில் குறுக்கிட சடையப்பர், விரும்பவில்லை. அவரது நலத்திலே அக்கறையாக இருந்தார்.
வேலையாட்களை அழைத்தார்.
“ஒற்றியூர் செல்லுங்கள். கம்பர் எப்படி இருக்கிறார்? என்று நேரில் கண்டு வாருங்கள்!” என்று கட்டளையிட்டார்.
வேலையாட்கள் விரைந்தார்கள். அவர்கள் சென்ற வேளை, அங்கே அடை மழை கொட்டோ கொட்டுயென கொட்டியது!
அடையாளம் கண்டு, ஒருவழியாக வல்லியின் வீட்டை வந்தடைந்தார்கள்.
வீட்டில் வல்லியும் இல்லை. கம்பரையும் காணவில்லை!
கூரை ஒழுகி வீடெங்கும் மழைநீர் ஓடியது. ஒரு மூலையில், மூதாட்டி ஒருவர் மட்டும் முடங்கிக் கிடந்தார்.
அவரைப் பார்த்து, “அம்மையே! கம்பர் இங்கு இருப்பதாகச் சொன்னார்கள். அவரைக் காணவே நாங்கள் வந்தோம்!” என்றனர்.
“கம்பர், இங்கே இல்லையப்பா! சோணாடு போய் இருக்கிறார்!” என்று சோர்வாய்ச் சொன்னார், மூதாட்டி.
“அப்படி என்றால்… வல்லி…?” என இழுத்தனர்.
“அவள், என் மகள்தான்! எங்கே சொன்னதைக் கேட்டாள்? அவரோடுதான் போயிருக்கிறாள்! கொள்ளை மழையில், நான்தான் இந்தக் குடிசைக்குள் கிடக்கிறேன்!” என்று நொந்தபடி கூறினார்.
கம்பரை காணமுடியாமல் போகவே, வேலையாட்கள் வீடு திரும்பினார்கள். கண்ட காட்சிகள் ஒவ்வொன்றையும் உள்ளபடியே, சடையப்பரிடம் விளங்கினார்கள்.
அதைக்கேட்ட, சடையப்பருக்கோ, வருத்தம் அதிகமானது. “அய்யய்யோ! ஒழுகும் வீட்டிலா கம்பர் இருக்கிறார். கவிஞருக்கு அது, கவுரவக் குறைவு இல்லையா?” என்று மனதிற்குள் நினைத்தார்.
வேலையாட்களைப் பார்த்தார். “ஒற்றியூருக்கு மீண்டும் செல்லுங்கள். ஒழுகும் வல்லியின் வீட்டுக் கூரையை, செந்நெற் கதிர்கள் கொண்டு வேயுங்கள். தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து வீட்டைப் பொலிவுபெறச் செய்யுங்கள்!” என்று உத்தரவைப் போட்டார்.
வள்ளல் வாய்மொழிக்கு மறுமொழி ஏது?
வேலையாட்கள் விரைந்தார்கள். செந்நெற் கதிர்களால் கூரை வேய்ந்து, வல்லியின் ஓட்டைக் குடிசையை, மறுகணமே எழில்மிகு இல்லமாக மாற்றிவிட்டார்கள்!
மூலையில் முடங்கிக்கிடந்த மூதாட்டிக்கோ, முகமெல்லாம் வியப்பு!
“இவ்வளவு உதவி செய்கிறீர்களே, நீங்கள் எல்லாம் யாரப்பா?” என்று கேட்க, “வள்ளல் சடையப்பரின் ஏவலர்கள்!” என மட்டும் பதில்கூறிவிட்டு அவர்கள் சென்றுவிட்டார்கள்!
நாட்கள் நகர்ந்தன. சோணநாடு சென்றிருந்த கம்பரும், வல்லியும் ஒருநாள் திரும்பிவந்தனர்.
வீட்டைப் பார்த்து, வல்லி வியந்துபோனார்.
“அம்மா! வீடு அலங்காரமாக இருக்கிறதே! இதை அழகுபடுத்தியது யார்?” என்று கேட்டார்.
“சடையப்ப வள்ளலின் ஏவலர்கள்!” எனச்சொல்லி, மூதாட்டி முணுமுணுக்க, அதுகேட்டு, கம்பரும் வியந்து நின்றார்!
“சடையப்பனின் வள்ளல் குணத்தை நான் என்னவென்று சொல்வது?
ஒரு பொதுமாதர் (தாசி) வீட்டைக்கூட புகழ் பெறும் வகையில், எனக்காக, செந்நெற் கதிர்கள் கொண்டு வேய்ந்து தந்திருக்கிறானே!
கங்கை வளத்திற்கு ஒப்பான திருவெண்ணெய் நல்லூரைச் சேர்ந்தவன் அல்லவா, அவன்?
அவனால் அரவணைக்கப்படும் நாவலர்களுக்கு பஞ்சத் தருக்களைப் போன்றவன் அல்லவா, அவன்?” என்று புகழ்ந்து மகிழ்ந்தார்!
இதோ, சடையப்ப வள்ளலையும், அவரது திருவெண்ணெய் நல்லூரையும், கம்பர் கனிந்து பாடிய செய்யுட்கள்…
(1)பொதுமாதர் வீட்டைப் புகழ்பெறவே செந்நெற்
கதிராலே வேய்ந்தருளும் கங்கைப் பதிநேர்
வருவெண்ணெய் நாடன் மகிழ்நா லர்க்கைந்
தருவான் அவன் சடையன் தான்.
(2) மோட்டுடெருமை வாவிபுக முட்டுவராற் கன்றென்று
வீட்டளவும் பால்சொரியும் வெண்ணெயே- நாட்டில்
அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்
உடையான் சடையப்பன் ஊர்.
நேரடிப்பொருள்:-
(1)ஒரு தாசியின் வீட்டைக்கூட புகழ் பெறும் வகையில், எனக்காக செந்நெற் கதிர்கள் கொண்டு வேய்ந்து தந்தவன்.
கங்கை வளத்திற்கு ஒப்பான திருவெண்ணெய் நல்லூரைச் சேர்ந்தவன். அவன் அரவணைக்கும் நாவலர்களுக்கு பஞ்சத் தருக்களைப் போன்றவன். அவன்தான், சடையப்பன்.
(2)பெரிய எருமைகள் குளத்தில் புகுந்து நீந்திக் களிக்கின்றன. அப்பொழுது நீரில் கிடக்கும் விரால்கள், அவைகளின் மடியில் முட்டி மோதுகின்றன. அவ்வாறு மோதுவது தமது கன்றுகள்தாம், என மயங்கிய எருமைகளோ, அவைகளுக்கு பாலைச் சுரக்கின்றன. பின்னர் பாலைச் சொரிந்து கொண்டே, எருமைகள் தெரு வழியாக வீடுகள்வரை செல்கின்றன. அத்தகைய வளம்கொண்டது, திருவெண்ணெய் நல்லூர்.
நாட்டில் அடையா நெடுங்கதவிற்கும், அஞ்சேல் என்ற சொல்லுக்கும் உரியவன், அந்த ஊரைச் சேர்ந்த, சடையப்பன்.
க.முத்துநாயகம், லாலாக்குடியிருப்பு.