ஏழை மாணவர்கள் குடும்பங்களுக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் உதவி
1 min read
Government school teachers help families of poor students
3-9-2020
ஏழை மாணவர்கள் குடும்பங்களுக்கு சென்னை கோடம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் உதவி வழங்கினார்கள்.
ஆசிரியர்கள் உதவி
தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பல தொழில்கள் முடங்கி போய் உள்ளன. இதனால் ஏழைகள் வேலைக்குச் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.
தற்போது பள்ளிக்கூடம் செயல்படாததால் சில ஆசிரியர்கள் மாணவர்கள் இடம் தேடிச் சென்று சமூக இடைவெளியை கடை பிடித்து பாடம் நடத்துகிறார்கள்.
பல ஆசிரியர்கள் சொந்தமாக பணம் செலவு செய்து ஏழை மாணவர்கள் குடும்பங்களுக்கு உணவுப் பொருள் உள்பட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார்கள். அதன்படி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பதிப்பக செம்மல் க.கணபதி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் சொந்த பணத்தை போட்டு ஏழை மாணவ-மாணவிகளின் குடும்பங்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்கினார்கள்.
14 வகை பொருட்கள்
அரிசி, பருப்பு, எண்ணெய், இனிப்பு, சீருடை, சானிடைசர், சோப்பு, பற்பசை, முகக்கவசம் உள்பட 14 வகை பொருட்கள் நிவாரணமாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பணியாளர் தொகுதி இணை இயக்குனர் சு.நாகராஜ முருகன் கலந்து கொண்டு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆ.அனிதா, தென் சென்னை மாவட்ட கல்வி அலுவலர் கோ.சரஸ்வதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
பல மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை பெற்று கொண்டனர். சமூக இடைவெளியை கடை பிடித்து இந்த நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியின் போது, அந்தப் பள்ளிக்கூடத்தில் 6, 9,11-ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையும் நடந்தது.
இதில் ஆசிிரியர்-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக பள்ளிக்கூட தலைமை ஆசிரியை இரா.தமிழரசி வரவேற்றார். இறுதியில் உதவி தலைமை ஆசிரியர் சீ.ராஜசேகர் நன்றி கூறினார்.