பேனர் வைத்தவர் இறந்தால் சினிமாவையே தடை செய்யலாமா? – நடிகை சூர்யாவுக்கு காயத்திரி ரகுராம் கேள்வி
1 min read
Can cinema be banned if the banner bearer dies? – Gayathri Raghuram question to actress Surya
14-9-2020
சினிமா படத்துக்கு பேனர் வைக்கும்போது ரசிகர் இறக்கிறார்கள். அப்படி என்றால் சினிமாவையே தடை செய்து விடலாமா என்று நடிகர் சூர்யாவுக்கு நடிகை காயத்திரி ரகுராம் கேள்வி விடுத்துள்ளார்.
நீட் பற்றி சூர்யா
மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வுக்கு தி.மு.க. உள்பட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. நடிகர் சூர்யாவும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு முன்தின நாள் ( 12-ந் தேதி) 3 மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுபற்றி கருத்து தெரிவித்த நடிகர் சூர்யா, “நம் பிள்ளைகளின் தகுதியையும், திறனையும் வெறும் தேர்வுகள் தீர்மானிக்க அனுமதிக்கக்கூடாது, இனி பெற்றோர்களும், ஆசிரியர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் அதே அறிக்கையில், நீட் தேர்வுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
காயத்திரி ரகுராம்
சூர்யாவின் இந்த கருத்துக்கு நடிகையும், பாரதீய ஜனதாவை சேர்ந்தவருமான காயத்ரி ரகுராம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ”நடிகர்களின் படங்கள் வெளியாகும் சமயத்தில் முதல்நாள் முதல் காட்சியின் போது ரசிகர்கள் தங்களது சொந்த பணத்தில் நடிகர்களுக்காக பேனர் வைக்கிறார்கள். சமயத்தில் அப்படி வைக்கும்போது தவறி விழுந்து உயிர் இழக்கின்றனர். இதற்காக சினிமாவையே தடை செய்து விடலாமா? தயவு செய்து மாணவர்களை தைரியமாக தேர்வை எதிர்கொள்ள சொல்லி ஊக்கப்படுத்துங்கள். மருத்துவர்களுக்கு ஒவ்வொரு நாளும் நோயாளிகளை பரிசோதிக்கும் போது அதுவும் ஒரு வித பரீட்சை தான்” என பதிவிட்டுள்ளார்