அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டாம்- தமிழக அரசு திட்டவட்டம்
1 min read
No special status for Anna University – Government of Tamil Nadu
16/10/2020
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகம்
நாட்டில் உள்ள முக்கிய உயர்கல்வி நிறுவனங்களுக்கு, சீர்மிகு சிறப்பு அந்தஸ்து வழங்கி, அதற்காக, கூடுதல் நிதி உதவி செய்யும் திட்டத்தை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் சேர, தமிழக உயர்கல்வி துறையும், அண்ணா பல்கலையும் இணைந்து விண்ணப்பித்தன. இதற்கு, மத்திய அரசும் ஒப்புதல் அளித்தது.
ஆனால் இதற்கு தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இப்போது தமிழக அரசும் உயர் அந்தஸ்து வேண்டாம் என்று கூறியுள்ளது.
இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தர்மபுரியில் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
அந்தஸ்து வேண்டாம்
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வரும்போது 69 சதவீத இட ஒதுக்கீடு கேள்வி குறியாகும். இட ஒதுக்கீட்டை பறி கொடுக்க முடியாது. சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு வரக்கூடும், கூடுதல் கட்டணம் வர வாய்ப்புள்ளது.
இந்த நிலை வரக்கூடாது என்பதற்காக சிறப்பு அந்தஸ்து வேண்டாம் என அரசு நினைக்கிறது. ஐ.ஓ.இ மூலம் கிடைக்கக்கூடிய சலுகைகள் தமிழக அரசே வழங்கும். உலகத்தரம் வாய்ந்த பல்கலைக் கழகமாக அண்ணா பல்கலைக்கழகம் திகழ்ந்து வருகிறது.
புதிய கல்வி கொள்கை
புதிய கல்விக் கொள்கையில் 2035 ஆம் ஆண்டு உயர்கல்வி பயின்றவர்கள் சதவீதம் 50 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் சென்ற ஆண்டே 49 சதவீதம் எட்டி உள்ளது இந்த ஆண்டு கணக்கீட்டின்படி 50 சதவீதத்தை எட்டும்.
பிளஸ் 2 தேர்வில் தனித்தேர்வர்களும் தேர்வு எழுதியுள்ளவர்களுக்கு வாய்ப்பாக, இடம் உள்ள கல்லூரிகளில் மாணவர்கள் இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பித்து சேர்ந்து கொள்ளலாம்.
இவ்வாறு அமைச்சர் அன்பழகன் கூறினார்.