சமூக ஆர்வலர்களுக்கு தோரணமலையான் விருது
1 min read
Thoranamalaiyan Award for Social Activists
17/10/2020
தோரணமலை முருகன் கோவிலில் சமூக ஆர்வலர்கள் 6 பேருக்கு தோரணமலையான் விருது வழங்கப்பட்டது.
தோரணமலை
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது தோரணமலை. அகத்தியர், தேரையர் வாசம் செய்த மலை இது. சித்தர்களால் உருவாக்கி வணங்கப்பட்ட முருகன்தான் மலை உச்சியில் உள்ள குகையில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
இந்த கோவிலில் தமிழ்மாத கடைசி வெள்ளிதோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும் அன்னதானமும் நடக்கும்.
கடந்த சில மாதங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லாமல் இருந்தது. ஆனால் கடந்த மாதம் முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
தோரணமலையான் விருது

நேற்று (16-ந் தேதி) புரட்டாசி கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. மலையடிவாரத்தில் உற்சவர் முருகன், வள்ளி -தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மேலும் விவசாயிகள் நலம்பெற விளைச்சல் செழிக்க ஸ்ரீவர்ண கலச பூஜை நடந்தது. இதில் பூஜையில் வைக்கப்பட்ட நெல் நாற்றுகளை விவசாயிகளுக்கு வழங்கினார்கள்.
ஆண்டு தோறும் சமூக ஆர்வலர்கள் 6 பேருக்கு தோரணமலையான் விருது வழங்கப்படும். அதேபோல் இந்த ஆண்டுக்கான விருது நேற்று இந்த பூஜையின் போது வழங்கப்பட்டது. விருதினை திரைப்பட இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் வழங்கினார். பூஜையை பாரத் பல்கலைக்கழக வளாக இயக்குனர் கே. சிதம்பரம் நடத்தினார்.
நிகழ்ச்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, சரலூர் மோகன், வடக்கு தாமரைகுளம் கூட்டுறவு சங்கத்தலைவர் பார்த்தசாரதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை தோரணமலை முருகன்கோவில் தர்மகர்த்தா செண்பகராமன் செய்திருந்தார்.