குமரியில் டாக்டர் தற்கொலை; டி.எஸ்.பி. காரணம் எனக் கடிதம்
1 min readDoctor commits suicide in Kumari; D.S.P. Letter as reason
27/10/2020
கன்னியாகுமரியில் டாக்டர் தற்கொலை செய்து கொண்டார். அவர் சாகும்முன்பு தனது சாவுக்கு டி.எஸ்.பி. காரணம் என்று கடிதம் எழுதி வைத்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டாக்டர் தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம் பறக்கையை அடுத்துள்ள இலந்தவிளையைச் சேர்ந்தவர் சிவராமபெருமாள். திமுக மருத்துவரணியின் குமரி மாவட்ட துணை அமைப்பாளராக இருந்தார்.
இவர் பறக்கையில் சொந்தமாக ஆஸ்பத்திரி நடத்தி வந்தார்.
இவரது மனைவி சீதா. இவர் அகஸ்தீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக இருக்கிறார்.
நேற்று (திங்கட்கிழமை) ஆஸ்பத்திரியில் உள்ள ஓய்வறையில் சிவராமபெருமாள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் வாயில் நுரைதள்ளிய நிலையில் பிணமாகக் கிடந்தார்.
தகவல் கிடைத்ததும் சுசீந்திரம் போலீசார் விரைந்து வந்து டாக்டரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
கடிதம்
தற்கொலை செய்வதற்கு முன்பு சிவராம பெருமாள் எழுதிய கடிதம் ஒன்று எழுதி வைத்திருந்தார். அந்தக் கடிதம் இரண்டு பக்கங்கள் கொண்டதாகும். அதை போலீசார் கைப்பற்றினர். அதுமட்டுமின்றி அந்த கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலா பரவியது.
அதில் கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு (டி.எஸ்.பி.) பாஸ்கரன் மற்றும் இலந்தவிளையை சேர்ந்த மற்றொருவரின் பெயரையும் குறிப்பிட்டு தனது சாவுக்கு அவர்கள் காரணம் என குறிப்பிட்டு இருந்தார்.
அவர்கள் தொடர்ந்து மிரட்டல் விடுத்தது, தன்னை தரக்குறைவாக திட்டியதால் தறகொலை செய்து கொண்டதாகவும், இதற்கு தனது மகள் துர்கா சாட்சி எனவும் கடிதத்தில் கூறியிருந்தார்.
இது குறித்து விசாரணை மேற்கொள்ள போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவிட்டார்.
அதனடிப்படையில் அவர் கடிதத்தில் குறிப்பிட்ட கன்னியாகுமரி டி.எஸ்.பி. பாஸ்கரன், உறவினர் விஜய ஆனந்த் ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் இரவில் காரில் குடும்பத்துடன் சிவராமபெருமாள் சென்றபோது போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டதும், அந்நேரத்தில் அவர் கண்டிக்கப்பட்டதும் தெரியவந்தது.
இது தவிர குடும்பப் பிரச்சினை ஏதும் உள்ளதா? எனவும் சிவராம பெருமாளின் மனைவி சீதா, மற்றும் குழந்தைகளிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
மன உளைச்சல்
சிவராம பெருமாள் ரஷ்யாவில் மருத்துவப் படிப்பு முடித்துள்ளார். அவர் இந்தியாவில் மருத்துவப் பணி மேற்கொள்வதற்கு மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரத்திற்கான தேர்வை முடிக்கவில்லை. இந்தப் பிரச்சினை தொடர்பாக போலீசார் சிவராம பெருமாளிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதனால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும், மேலும் குடும்த்திலும் பிரச்சினையும் ஏற்பட்டதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தி.மு.க. கோரிக்கை
இந்த நிலையில் மருத்துவர் சிவராம பெருமாளின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., அறிவித்துள்ளார்.