சினிமா தியேட்டர்களில் இடைவேளை கிடையாது; வழிகாட்டு நெறிமுறை அறிவிப்பு
1 min read
There is no break in cinema theaters
3/11/2020
சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் இடைவேளையின் போது மக்கள் வெளியே வரக்கூடாது என்று கூறப்பட்டு உள்ளது.
சினிமா தியேட்டர்
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதில் சினிமா தியேட்டர்கள் வருகிற10-ந் தேதி முதல் சினிமா தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
முக கவசம்
- திரையரங்க வளாகத்திற்குள் பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.
- முககவசம் அணியாதவர்களை திரையரங்கினுள் அனுமதிக்கக்கூடாது.
- திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பொதுமக்கள் அமர்ந்து படம் பார்க்க அனுமதிக்க வேண்டும்
- திரையரங்குக்கு வெளியேயும், பொது இடங்களிலும் குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
- திரையரங்கின் நுழைவாயிலில் மக்கள், ஊழியர்கள் என அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும்
- பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடித்து வரிசையில் வரும் வகையில் குறியீடுகள் போட வேண்டும்.
இடைவேளை
- திரைப்படத்தின் இடைவேளையின்போது மக்கள் வெளியே வருவதை தவிர்க்க ஊக்குவிக்க வேண்டும்.
- ஒவ்வொரு திரைப்படக் காட்சிக்கும் இடையே போதுமான கால இடைவெளி இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.