உதவி செய்ய வந்தவர் மீது குழந்தை கடத்தல் புகார்
1 min read
Child abduction complaint against the person who came to help
4/11/2020
குழந்தையின் அழுகையை நிறுத்த உதவி செய்தவர் மீது குழந்தையை கடத்தியதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.
11 மாதக் குழந்தை
திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி சமத்துவபுரத்தை சேர்ந்த சக்திவேல். இவர் உடன்குடியில் மின் உற்பத்தி நிலையத்தில் வேலை பார்த்துவருகிறார். இவரது மனைவி சந்தியாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கடந்த 2 நாட்களாக சிகிக்சை பெற்று வருகிறார். இவர்களது 11 மாத ஆண் குழந்தை உள்ளது.
இவர்களுக்கு உதவியாக சக்திவேலின் தாயார் ரேவதி மருத்துவமனை வளாகத்தில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
குழந்தை மாயம்?
இந்த நிலையில், மருத்துவமனையில் இருந்தபோது ரேவதியிடம் ஒருவர் பேச்சு கொடுத்து அறிமுகம் ஆகியுள்ளார். இன்று (புதன்கிழமை ) பிற்பகல் பாட்டி ரேவதி வைத்திருந்தபோது, குழந்தை அழுதுள்ளது. இதையடுத்து அந்த நபர் அழுகையை நிறுத்துவதற்காக குழந்தையை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார். சிறிது நேரத்திற்கு பின்னர் அவர் திரும்பி வராததால் ரேவதிக்கு குழந்தை கடத்தப்பட்டதா என சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் தென்பாகம் போலீஸ் நிலையத்தில் குழந்தையை ஒருவர் கடத்திச் சென்றுவிட்டதாக புகார் செய்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதனிடையே குழந்தையை கொண்டு சென்றவர் மீண்டும் சிறிது நேரத்திற்கு பி்னனர் குழந்தையுடன் வந்தார். அப்போது அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். குழந்தையின் அழுகையை நிறுத்த அழைத்துச் சென்ற தன்மீதே புகார் அளிக்கப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.