May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

கொஞ்சம் “கள்” போடலாமா?/ சிவகாசி முத்துமணி

1 min read

Tamil Ilakkiyam by Sivakasi Muthumani

22/11/2020

கள் போட்டால்தான் பலருக்கும் தடுமாற்றம் ஏற்படும் என்று அறிவோம்.ஆனால், நம்மில் பலருக்குக் “கள்” போடுவதிலே பெரிய தடுமாற்றம் ஏற்படுகிறது.

“கள்” என்பது விகுதிகளுள் ஒன்று. பன்மை விகுதி. மரம் என்றால் ஒரு மரத்தையும் மரங்கள் என்றால் ஒன்றுக்கு மேற்பட்ட மரங்களையும் குறிக்கும்.(பலவின் பால்).

அவை, இவை என்னும் சொற்களே பன்மையைக் குறிக்கும் சொற்கள்தான். ஆனால் சிலர் அறியாமல் ‘அவைகள்”, “இவைகள்” என்று இச்சொற்களுக்குக் “கள்” கொடுத்து போதை ஏற்றி விடுவது உண்டு. அதனால் அவற்றைப் படிப்போர்க்கு ஒருவித (பொருள்)மயக்கம் ஏற்பட்டுவிடும்.மேலும் அதுகள் இதுகள் என்று எழுதும் அறிஞரும் உளர்.
அது என்பது ஒருமை. அதன் பன்மைச் சொல் அவை. அப்படியே இது..இவை என்பனவும். அது மரம். அவை மரங்கள். பின் எங்கிருந்து, ‘அவைகள் மரங்கள்’ என்ற தவறான தொடர் வந்தது? எனவே அவைகள் இவைகள் என்னும் சொற்கள் தவறானவை என்பது ஒரு முடிவு.

இது ஒருபுறமிருக்க இதைவிட மாபெரும் தவறு ஒன்று நாம் செய்து கொண்டிருக்கிறோம். அவர் என்னும் சொல்லோடு “கள்” சேர்த்து அவர்கள் என்று சொல்வது. அவர் என்பது படர்க்கை இடத்தில் இருக்கும் மனிதரைக் குறிக்கும். மிகக் குறிப்பாக ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இருக்கும் ஆண் பெண் இரு பாலரையும் குறிப்பதுதான் அவர் எனும் சொல்.(அர்,ஆர்..பலர்பால்)
அவன்,அவள் என்ற ஆண்பால் பெண்பால் சொற்களைத்தான் அவர் என்று பலர் பாலாக மாற்றி இருக்கிறோம். அன் என்னும் ஆண்பால் ஒருமை விகுதியை நீக்கி அர் விகுதி சேர்த்து. (அர் என்பது பலர்பால் விகுதி.) பிறகு எப்படி அவர் என்பதோடு கள் சேர்ந்தது என்பதுதான் புரியவில்லை. அப்படியானால் அவர்கள் என்னும் சொல்லும் தவறான சொல் தான். ஆனால் நடைமுறையில் அவர் வேலைக்கு வரவில்லை என்று சொன்னால் யாரோ ஒரு ஆண் இன்று வேலைக்கு வரவில்லை என்றுதான் பொருள் கொள்கிறோம். அவள் என்று சொல்லும் நமக்கு அவன் என்று சொல்ல ஒரு தயக்கம் அல்லது பயம்.
இந்தத் தடுமாற்றத்திற்குக் காரணம் அந்த மரியாதைப் பன்மை…… மரியாதைப் பன்மை என்றால் என்ன?. பன்மை விகுதியை எடுத்து அதை ஒருமைக்குப் பெயருக்குச் சூட்டுவது.. பலர் பால் விகுதியை எடுத்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் சூட்டுவது கேட்டால், அர் என்பதைச் சேர்த்துச் சொன்னால் மரியாதையாக இருக்கிறது. அன் அல்லது அள் என்று சொன்னால் மரியாதை குறைவாக இருக்கிறது என்று பதில் சொல்வோம்.
தந்தை என்பதுதான் உரிய சொல். அது மரியாதைக் குறைவு என்று கருதி ஆர் என்ற விகுதியைச் சேர்த்து தந்தையார் என்று அழைத்த போது தமிழில் குழப்பம் விளைந்தது. தாய் என்பது சரியான சொல் அதோடு ஆர் சேர்த்து தாயார். என் தந்தையார் பெயர் கந்தசாமி. என் தாயார் பெயர் அங்கயற்கண்ணி. இப்படி எழுதி விட்டோம்.அன்னையர்(அன்னையர் தினம்) என்பதை பலர் பால் என உணர்ந்து அன்னையார்!!! என்று சொல்லி ஒருமையாக்கிக் கொண்டோம். சிலர் அண்ணன் என்று சொல்வது கூட மரியாதை இல்லை என்று நினைத்து, அண்ணார், அண்ணியார் என்று சொல்லி மொழியைச் சிதைத்தனர்.தகப்பன் என்ற சொல்லோடு ஆர் சேர்த்து தகப்பனார் என்று சொல்வது என்ற சொல்லோடு ஆர் சேர்த்து பாட்டனார். ஆசிரியன் என்ற சொல்லை ஆசிரியர் என்று மரியாதைக்காக சொல்லும்போது ஆசிரியன் என்றால் ஒருமை. ஆசிரியர் என்றால் பன்மை என்ற வேறுபாடு தெரியாமல் போய்விடும். மாணவர் என்று சொன்னாலே பன்மைச் சொல் தான் மாணவன் என்பது தான் ஒருமைச் சொல் மாணாக்கன் என்பது ஒருமை மாணாக்கர் என்பது பன்மை. ஆசிரியர் என்பதை மரியாதைக்காக சொல்லுகிறோம் என்ற பெயரில் சொல்லிவிட்டு பிறகு அவனோடு ஒரு கள் சேர்த்து ஆசிரியர்கள், மாணவர்கள் என்று சொல்வது தவறு .

அப்பன் என்னும் சொல்லை அப்பர் என்று கூறுவது. அம்மை என்னும் சொல்லோடு ஆர் சேர்த்து அம்மையார் என்று சொன்னது தமிழில் குழப்பத்திற்கு வித்திட்டது என்று துணிந்து சொல்வேன்.

அம்மான் என்ற சொல் மாமன் என்று திரிந்து அத்துடன் ஆர் சேர்த்து மாமனார், மைத்துனன் என்று சொல்லாமல் மைத்துனர்… தலை… தலைவன்… தலைவர். இப்படி எல்லாம் மரியாதை என்ற பெயரில் விகுதியை மாற்றி வைத்தது மிகப்பெரிய கொடுமை.. இது இலக்கண ஆசிரியர்களையே சார்ந்தது.

ஒரு வேடிக்கையைப் பார்ப்போம். ஐ என்பது ஓரெழுத்து ஒருமொழி. இச்சொல் பல்வேறு பொருட்களை த் தந்தாலும் அவையெல்லாம் தலைவன் என்பதையே மையமாகக் கொண்டிருக்கும். “என் ஐ ,என்னை மறந்துவிட்டான்”.. என்று ஒரு பெண் சொன்னால், என் தலைவனாகிய காதலன்( கணவன்) என்னை மறந்து விட்டான் என்பது பொருள்படும். ஆனால் ஐ என்னும் சொல்லோடு அன் என்ற விகுதியைச் சேர்த்து ஐயன்.. என்று சொல்லி பிறகு மேலும் மரியாதை சேர்க்க வேண்டும் என்று கருதி ஐயன் என்றால் மரியாதை இல்லை என்று பயந்து போய், அதையே ஐயர் என்று மாற்றினர். இச்சொற்களுக்கு எல்லாம் தலைவன் என்பது தான் பொருள்.
கிறித்தவ மதத்தில் மதபோதகராக இருப்பவரை ஐயர் என்பதுதான் வழக்கம் தலைவர் என்பது பொருள்.
இச்சொல் பிற்காலத்தில் மேலும் மாற்றம் பெற்று அய்யன்.. என்று எழுதப்பட்டு கடவுளை இப்படி சொன்னால் மரியாதை குறைவு என்று நினைத்து சொல்லோடு ஆர் என்ற விகுதியைச் சேர்த்து அய்யனார், அய்யனார் கோவில் என்று சொல்வது மேலும் ஒரு வேடிக்கை. பிள்ளை என்ற சொல்லோடு ஆர் என்ற பகுதியை சேர்த்து பிள்ளையார் என்று சொல்வார்கள்.
தமிழறிஞர் சிலர் பாவேந்தர் பாரதிதாசனின் மகன் என்று சொல்லாமல். பாவேந்தர் பாரதிதாசனின் மகனார் மன்னர்மன்னன்…. என்று மகன் என்ற சொல்லோடும் ஒரு ஆர்.. சேர்ப்பது ஒரு கொடுமை.
நக்கீரனை நக்கீரர் ஆக்கி, இறையனை இறையனார் ஆக்கி, ஒக்கூர் மாசாத்தியை, மாசாத்தியார் ஆக்கி நப்பூதனை நப்பூதனார் என மாற்றி…
சிறுவர் என்று சொன்னாலே ஆண் குழந்தையோடு பெண் குழந்தையையும் சேர்த்து குறிக்கும் என்று அறியாமல் சிறுமியர் என்ற ஒரு சொல்லை உருவாக்கி சிறுவர் சிறுமியர் என்று சொல்வதும் நகைப்புக்குரியது.
இறை என்னும் சொல்லே கடவுளைக் குறிக்கும் அதற்கும் ஒரு ஆண்பால் விகுதி சேர்த்து இறைவன் இப்போது இறைவி என்ற வார்த்தையையும் ஆனால் இறைவனுக்கு மட்டும் மரியாதையாக ஆர் சேர்க்கவில்லை இறைவர் என்று சொல்லவில்லை சாமி என்பதோடு ஆர் சேர்த்தால் அது சாமியைக் குறிக்காது. சாமியார் என்பதோடு ஒரு கள் சேர்த்து சாமியார்கள். அதைப்போல பெரியோர்கள் என்று சொல்வதும் வேடிக்கையானது தான். பெரியவன் என்பதை மரியாதையாக பெரியவர் என்று சொல்லிவிட்டு அதையே பன்மையாக மாற்றும்போது பெரியோர் அல்லது பெரியார் என்று அடுத்த கட்டத்திற்கு போய், அத்துடன் ஒரு கள்
சேர்த்து பெரியோர்கள்…. மேடையில் பேசும்போது பெரியோர்களே.
அக்காலத்தில் பெரியீர்..என விளித்தனர். என்று அழைப்பது…
பெரியோர்களே என்று சொன்னால் அதில் பெண்கள் சேர மாட்டார்கள் எனக்கருதி உடனடியாக தாய்மார்களே என்று விளிப்பது… வேடிக்கையாக இருக்கிறதல்லவா. எங்கெல்லாம் இவர்களால் ஆர் என்ற பகுதியை நேரடியாகச் சேர்க்க இயலவில்லை அங்கே மார் என்று சேர்த்து விடுவார்கள் அதில் ஒன்றுதான் தாய்மார் என்பது. ஆழ்வார் என்று சொல்லாமல் ஆழ்வார்கள் என்று சொல்லிவிட்டு நாயன்மார் என்று சொல்வதும் வழக்கம்.

கொத்து வேலை செய்பவர் கொத்தன். கொத்தன் என்று சொன்னால் மரியாதை இல்லை என்று அங்கு ஒரு ஆர் சேர்த்து கொத்தனார்…. சாத்தன் என்றால் வணிகன் அதுவும் மரியாதை இல்லாத சொல் என்று கருதி சாத்தனார்… எனது இந்த மரியாதைப் பன்மைதான் குழப்பங்களுக்குக் காரணம். கோ என்றாலே கடவுள் அல்லது மன்னன். அச்சொல் உடன் ஆன் சேர்த்து, கோன்.. பின்னர் ஒரு ஆர் சேர்த்து கோனார்… அறவோர் துறவோர்..ஓர்.. விகுதி பெற்ற பன்மைப் பெயர்கள்.. அடியார் ஆர் விகுதி பெற்ற பன்மைப் பெயர்… அவையே பின்னாளில் கள் என்பதை உள்ளே சேர்த்து அடிகள் அதன்பின் ஆர் சேர்த்து அடிகளார்…… காந்தி அடிகள் என்று கூறுவோர் உண்டு காந்தியார் என்று சொல்வோரும் உண்டு. அறிஞர், வறிஞர் சொற்களும் கூர்ந்து நோக்கத்தக்கவை.

சரி. இப்போது மீண்டும் கொஞ்சம் கள்ளுக்கு வருவோம். வாழ்த்துக்கள் வாழ்த்துகள் எது சரி என்று கேட்டால் இரண்டுமே தவறு என்று நான் சொல்வேன். ஏனெனில் வாழ்த்து என்பது பெயர்ச்சொல்...  வாழ்த்த, வாழ்த்தி என்பவை எச்சங்களாக அமையும் ஏனெனில் வாழ்த்து என்பது வினையாகவும் பயன்படுத்தப்படும். நீ அவனை நன்றாக வாழ்த்து. வாழ்த்து என்பது பெயர்ச்சொல்லாக வரும்போது அதற்கு எண் விலக்கு ஆகிவிடும். எத்தனைமுறை வாழ்த்து சொன்னாலும் அது வாழ்த்துதான் வாழ்த்துக்கள் ஆகாது. எத்தனை முறை சொன்னாலும் வணக்கம்தான் வணக்கங்கள்.

“வணக்கம் பலமுறை சொன்னேன் சபையினர் முன்னே தமிழ்மகள்வணக்கம் பலமுறை சொன்னேன் சபையினர் முன்னே தமிழ்மகள் கண்ணே” என்று கண்ணதாசன் பாடினார். வணக்கம் பலமுறை சொல்லலாம் வணக்கங்கள் சொல்ல முடியாது.கடவுளை வாழ்த்தி பத்து பாடல்கள் திருவள்ளுவர் பாடியிருந்தாலும் அதிகாரத்தின் பெயர் கடவுள் வாழ்த்து தான். கடவுள் வாழ்த்துகள் அன்று. கடவுள் வாழ்த்துப் பாடல்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆயிரம் திருக்குறள் நமக்கு தெரிந்திருந்தாலும் ஆயிரம் திருக்குறள் எனக்கு தெரியும் என்று தான் சொல்ல வேண்டும் ஆயிரம் திருக்குறள்கள் தெரியுமென்று சொல்வது எப்படி இருக்கிறது. இதையே ஒருவர், எழுத்தாளர் சுஜாதாவிடம்,” எனக்கு 400 குறள்கள் தெரியும் என்று சொன்னால் தவறா? “என்று கேட்டாராம். அதற்கு சுஜாதா, “திருக்குறள் ஒரு போதும் கள்ளை ஏற்றுக் கொள்வதில்லை என்று நயமாக சொன்னார். குறட்பாக்கள் என்று சொல்லலாம். செய்யுளின் உறுப்பான அடியைக் கூட எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அடிகள் என்று சொல்வதில்லை மூன்றடி, நான்கடி என்று கூறுவதுதான் வழக்கம்.
குறள்கள் என்று சொல்லக்கூடாது. வள்ளுவர் நட்பு குறித்து ஐந்து அதிகாரங்களில் 50 குறள் பாடியுள்ளார். 50 குறட்பாக்கள் பாடியுள்ளார் என்று கூறலாம். குறள் என்பது இரண்டடி வெண்பாவைக் குறிக்கும். ஆகுபெயராய்த் திருக்குறள் நூலை மட்டும் குறிக்கும்.உனக்கு எத்தனைக் குறள் தெரியும்? என்பதை விடுத்து உனக்கு எத்தனைக் குறள்கள் தெரியும்?எனக் கேட்டல் தவறு.
வாழ்த்து, பாராட்டு, நன்றி, வணக்கம் இவற்றில் கள் சேர்த்து கலக்கி விட்டார்கள். வணக்கங்கள் என்று சொல்கிறான். வாழ்த்துக்கள் என்று சொல்லுகிறான். பாராட்டுகள் என்று சொல்லுகிறான். நன்றிகள் சொல்லுகிறான்.
தம்பி வாழ்த்துக்கள் என்று சொன்னால் அவன் அண்ணா நன்றிகள்… என்று பதில் சொல்கிறான். இருவருமே தவறாகத்தான். தம்பி உன்னை வாழ்த்துகிறேன் என்று சொன்னால் என்னை வாழ்த்தியமைக்கு நன்றி சொல்கிறேன் அண்ணா என்றாவது குறைந்தபட்சம் சொல்ல வேண்டும். அதிலும்கூட குறைபாடு உண்டு நன்றி என்ற சொல் ஆராயத்தக்கது… இந்நாளில்தான் நன்றி என்பது.. ஆங்கிலத்தில் thank you என்று சொல்வதற்கு இணையாக நம்மால் வழங்கப்பட்டு வருகிறது. தம்பி உன் பிறந்த நாளில் உன்னை வாழ்த்துகிறேன் என்று அண்ணன் சொன்னால், மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா என்று தம்பி சொன்னால் போதும். உன் வாழ்த்து என்னை வாழ வைக்கும் அண்ணா.என்றும் மறவேன் அண்ணா என்று சொன்னால் சாலப் பொருந்தும்.
எத்தனை ஆயிரம் ரூபாய் வைத்திருந்தாலும், அதை ஒருமையில் தான் சொல்வோம் என்னிடம் 10 ஆயிரம் ரூபாய் இருக்கிறது என்று. ஆங்கிலத்தில் 5 crores… தமிழில் 5 கோடி… ஐந்து கோடிகள் என்று சொல்வது முறையன்று. எங்கு வேண்டுமானாலும் கள் என்பதை ச்சேர்த்து விடலாம் என்று நினைப்பது மாபெரும் தவறு. அதில் மிகப்பெரிய தவறு என்னவென்றால் வாழ்த்துகள் என்பதே தவறு அதிலும் வாழ்த்துக்கள் என்று…. ஒரு அழுத்து அழுத்தி விடுகிறார்கள். கருத்துக்கள், எழுத்துக்கள் என்னும் எல்லாமே தவறான சொற்கள். பனங்கள், தென்னங்கள் எல்லாம் உண்டு. ஆனால் கருத்துக்கள் எழுத்துக்கள் …இவை எங்கு கிடைக்கும் என்றுதான் தெரியவில்லை.கருத்துகள் எழுத்துகள் என்பவையே சரி. ஆனால் வாழ்த்து, வணக்கம், நன்றி சொற்கள் எப்போதும் கள் சேர்த்து எழுதப் படக்கூடாது. தமிழ் எழுத்துக்கள் 247. முதல் எழுத்துகள் 30. சார்பெழுதுகள் 216. இன்று காலை முதல் ஐந்து முறை உங்களுக்கு வணக்கம் சொன்னேன் தாங்கள் கண்டுகொள்ளவில்லை. என்று சொல்வதை விடுத்து, இன்று காலை முதல் 5 வணக்கங்கள் உங்களுக்குச் சொன்னேன் தாங்கள் கண்டுகொள்ளவில்லை என்று சொல்வது எந்த முறையில் சரியானது?

நாட்கள் என்பது நாள்பட்ட கள்ளைக் குறிக்குமானால்… நாள்கள் மட்டும் அப்பொருளைக் குறிக்காதா என்ன?.நாள்+கள்.. புணர்ச்சி விதியின் படி நாட்கள் என்று வரும்…. ஒருவேளை பொருள் மயக்கம் ஏற்பட்டு விடும் என்று கருதுவோர் புனராமலேயே நாள்கள் என்று எழுதுவது உண்டு.
புள்+கள்… புட்கள்
முள்+கள்… முட்கள்…. என கள் விகுதி சொல்லோடு புணரும்போது ளகரம்.. டகரம் ஆகும்… என்பது பொதுவான விதி… ஆனால் நாட்கள் என்பதை நெடுநாள் பட்ட கள் என்று புரிந்து கொள்வார்களோ என்ற ஐயத்தில் புணர்ச்சியே வேண்டாம் என்று அச்சொல்லை அப்படியே விட்டு விடுகிறார்கள்..பொருள்மயக்கம் ஏற்படுமானால் நாள்கள் என்பதும் அப்படியேதான் பொருள் தரும்…. நாள் என்றால் பகல்… பகல்கள்…இரவுக்கள்..???
முகில்கள் என்றால் மேகம் தரும் கள்ளோ?
தெருக்கள் என்றால் தெருவில் கிடைக்கும் கள்ளோ?.. ஊர்கள் என்றால் உள்ளூரிலேயே கிடைக்கும் கள்ளாக இருக்குமோ.? முகத்தில் பருக்கள் என்றால்… பருக்களில் இருந்து வடியும் கள்ளோ? கொசுக்கள் என்று சொன்னால் கொசு வழங்கும் மதுவோ??…
நாள்கள்,தாள்கள்… என்று புணர்ச்சி இன்றி இயல்பாய் எழுதலாம்.
சாம்பசிவன் என்பதுதானே அவர் பெயர் அத்துடன் மறையாத என்று கருதி ஆர் சேர்த்து சாம்பசிவனார்…. இதைப் போன்றுதான் பாபநாசம் சிவனார்… பரமசிவனார்…… இப்படித்… தேவையற்ற மரியாதையை மிகையாகக் கொடுப்பதை…. நிறுத்தினாலே….. பொருள் மயக்கம் ஏற்படாது…. ஒளவை என்பதுதானே அவள் பெயர்…. அத்துடன் ஆர் சேர்த்த பிறகு…. அவள் ஒருத்தியா? பலரா? ஆணா ?பெண்ணா? என்ற குழப்பம் ஏற்பட்டு விடுகிறது அல்லவா.

பேர்கள். கம்பன்..பாரதி…கொம்பன்.கொம்பர்…..ராமன் முருகர் கண்ணன் மாமனார்
செய்தித்தாள்களில் பேர் என்ற ஒன்றை உருவாக்கி அச் சொல்லுடன் கள் சேர்த்து ஐந்து பேர்கள்.. என்று எழுதுவது ஒரு வேடிக்கை.
முருகன் கோவிலை முருகர் கோவில் என்று சொல்லி, கிருஷ்ணனை கிருஷ்ணர் என்று உச்சரித்து வரும் நாம் கண்ணனை மட்டும் கண்ணர் என்று சொல்லாமல் கண்ணன் என்றே சொல்லி வருகிறோம்.

கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு.. என்று பாரதி ஒருமையில் தான் சொன்னான். பாரதி பாடல்களில் பல இடங்களில் கம்பன் வருகிறான். யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவனைப் போல் இளங்கோவைப் போல்.... மூன்று பெரும் புலவர்க்கும்.. அன் விகுதி மட்டுமே சேர்த்தான் பாரதி.

பாரதி என்பது சமஸ்தானத்தில் கொடுக்கப்பட்ட பட்டம். கலைமகள் என்பது அப் பட்டத்தின் பொருள். அவர் பெயர் சுப்ரமணியன். நாம் அதை மறந்துவிட்டு பாரதி என்ற பட்டத்திற்கு பின்னும் ஆர் விகுதி சேர்த்து அவரைப் பாரதியார் என்று அழைப்பது விபரீதம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.