காரையாறில் மர உச்சியில் குடிசை அமைத்து பாடம் படிக்கும் மாணவர்கள்
1 min readStudents setting up a hut on a tree top in Karaiyar
5/12/2020
நெல்லை மாவட்டம் காரையாறில் மாணவ-மாணவிகள் மர உச்சியில் குடிசை அமைத்து பாடம் படிக்கிறார்கள்.
மர உச்சியில் குடிசை
ஆதி காலத்தில் மனிதன் குகையிலும் மரப்பொந்துகளிலும் வசித்து வந்தான். அதன்பின் வன விலங்குகளில் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள மரத்தில் குடிசை போன்று அமைத்து அதில் தங்கினான்.
ஆனால் இப்போது மர உச்சியில் குடிசை அமைத்து மாணவ-மாணவிகள் பாடம் படிக்கிறார்கள். இது எங்கே தெரியுமா? நெல்லை மாவட்டம் பாபநாசம் மலையின் ஒரு பகுதியான காரைாயறில்தான்.
இணைதள சிக்னல்
அந்தப் பகுதியில் குடியிருப்புகள் உள்ளன. அங்கு ஆரம்ப பள்ளிக்கூடம் ஒன்றும் இயங்குகிறது. அங்கு வசிக்கும் மாணவர்கள் கல்லூரியில் படிக்க பாபநாசம், அம்பை, ஆழ்வார்குறிச்சி போன்ற ஊர்களுக்கு வந்து செல்வார்கள்.
தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. ஆனால் மாணவ-மாணவிகளுக்கு ஆன்- லைன் மூலம் பாடம் நடத்தப்படுகிறது. செல்போன், லேப்-டாப் மூலம் அவர்கள் பாடம் படிக்கிறார்கள்.
ஆனால் காரையாறு பகுதியில் இணைய தள சேவைக்கு சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் அங்குள்ளவர்களுக்கு பாடம் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதற்கு அவர்களே வழிகண்டார்கள். இன்டர் நெட் சிக்னல் எங்கே கிடைக்கிறது என்று ஆய்வு செய்தனர். அப்போது மரத்தின் உச்சியில் சிக்னல் கிடைத்தது.
உடனே எளிதில் ஏறக்கூடிய அதே நேரம் உயரமான மரத்தை தேர்வு செய்து அதன் மேலே குடிசை அமைத்தனர். அங்கு மாணவ-மாணவிகள் செல்போனுடன் ஏறிச் சென்று பாடம் படிக்கிறார்கள். இதற்கு ஊர் மக்களும் உதவி செய்கிறார்கள்.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக இங்கே மாணவர்கள் திகழ்கிறார்கள். மாணவர்கள் நினைத்தால் எதையும் செய்து காட்டுவார்கள்.