அரசு சித்த மருத்துவருக்கு கொரோனா மேலாண்மை விருது: தெலுங்கானா கவர்னர் வழங்கினார்
1 min readCorona Management Award for Government Paranormal Physician
5/12/2020
அரசு சித்த மருத்துவருக்கு கொரோனா மேலாண்மைக்கான விருது: தெலுங்கானா ஆளுநர் வழங்கினார்
இந்திய மருத்துவத் துறைக்கான சிறந்த தன்னலமற்ற கொரோனா மேலாண்மைக்கான இந்திய மருத்துவ விருது பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி விரிவுரையாளர் டாக்டர் ஜி சுபாஷ்சந்திரனுக்கு தெலுங்கானா ஆளுநரால் வழங்கப்பட்டது.
உலகத் தமிழ் வர்த்தக கழகம் , தமிழ்நாடு இந்தியமருத்துவத்துறை, தேசிய சித்த மருத்துவ கழகம், மத்திய சித்த ஆராய்ச்சி கழகம் ஆகியவை இணைந்து உலக அளவில் சித்த மருத்துவத்தின் மூலம் கொரோனா மேலாண்மையில் தன்னார்வலராக திறம்பட பணியாற்றியவர்களுக்கு இந்திய மருத்துவ விருது வழங்கும் விழாவை இன்று சென்னையில் நடத்தின. அந்த வகையில், பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளராகப்பணியாற்றும் டாக்டர் சுபாஷ் சந்திரன் இந்த விருதைப் பெற்றார்.
கொரோனா காலத்தில் கொரோனா பரவாமல் தடுப்பதற்கு, நோய் கட்டுப்பாட்டு பகுதியில் நிலவேம்பு, கபசுரக் குடிநீர் வழங்குதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து, பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பம், அவர்களோடு தொடர்புடையவர்கள் என்று கண்காணித்து அவர்களுக்கு , தகுந்த முறையில் சித்தமருத்துவ நெறிமுறைகளை கையாண்டு கொரானா பரவலை தடுக்க இவர் நடவடிக்கைகள் மேற்கொண்டார்.
அத்துடன் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையோடு இணைந்து ஆங்கில மருத்துவ முறையுடன் சித்தமருத்துவ முறையையும் இணைத்து கொரோனா நோயாளிகளுக்கு வழங்கி ஆய்வு நோக்கில் செயல்பட்டார். மேலும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கொரோனா தடுப்பு பாதுகாப்பு பணியில் சேவையாற்றினார். இந்த சேவைகளை பாராட்டும் விதத்தில் இந்த கொரோனா மேலாண்மை விருதை, தெலுங்கானா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் வழங்கி பாராட்டினார்கள்,
விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர். ஜெ.ராதாகிருஷ்ணன் இந்திய மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் எஸ். கணேஷ், உலகத் தமிழ் வர்த்தக கழகத் தலைவர்.ஜெ.செல்வக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்