தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குகிறது-இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
1 min read
Southwest Monsoon begins early India Meteorological Department information
14.5.2024
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பர் மாதம் இறுதியில் முடிவடைவது வழக்கம். இந்தியாவில் ஆண்டு முழுவதுக்கும் தேவையான மழையில் 70 சதவீதம் மழை ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யும் தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் பெறப்படுகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்குகிறது. அடுத்த வாரம் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது. வருகிற 19-ந்தேதி தெற்கு அந்தமான் கடல், வங்காள விரிகுடாவின் சில பகுதிகள் மற்றும் நிக்கோ பார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது.
அதனை தொடர்ந்து தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சரியான நேரத்தில் பருவமழை தொடங்கும். ஜூன் 1-ந்தேதி கேரளா பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கி விடும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்வதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.
தென்மேற்கு பருவமழையின்போது கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பலத்த மழை பெய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.