சரத்குமார் கொரோனாவில் இருந்து விடுபட்டார்
1 min read
Sarathkumar was released from the corona
13/12/2020
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் சரத்குமார் அதிலிருந்து குணம் அடைந்தார்.
சரத்குமார்
நடிகரும் சமத்துவக் கட்சி தலைவருமான சரத்குமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஐதராபாத் சென்றிருந்தார். அங்கு அவருக்கு சனி, தொண்டை வலி ஏற்பட்டது. இதனால் அவர் ஆஸ்பத்திரிக்குச் சென்றாார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இதனை அடுத்து கடந்த 8-ந் தேதி ஐதரபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இப்போது அவர் குணமாகிவிட்டார்.
இதுபற்றி சரத்துகுமார் வெளியிட்ட செய்தி வருமாறு:-
நன்றி
நான் 8-ந் தேதி ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன். 6 நாட்களுக்கு பிறகு இன்று(ஞாயிற்றுக்கிழமை) மருத்துவமனையில் இருந்து குணமடைந்து திரும்புகிறேன்.
உடல்நலம் குணமடைய உதவிய மருத்துவர்கள் தீபக், சுனிதா, விஷ்ணு விஜயக்குமார், ரவிக்கிரண், சந்திரகாந்த், செவிலியர்கள், டயட்டீஷியன், தூய்மை பணியாளர்கள், வார்டு செக்யூரிட்டிகள் எல்லாருக்கும் மனப்பூர்வமாக நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். மருத்துவ நிர்வாகம் மற்றும் சிகிச்சையில் பங்கெடுத்த அனைவரது மிகப்பெரிய முயற்சியாலும், உதவியாலும் தான் எனது தேகநிலை சீராகியிருக்கிறது.
மேலும் 2 வாரங்கள் நான் தனிமைப்படுத்தி இருக்க வேண்டும். என்னுடைய ரசிகர்கள், சமத்துவ சொந்தங்கள், உறவினர்கள், உடன் பணியாற்றியவர்கள், நண்பர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் அனைவருடைய பிரார்த்தனைகளாலும் வழிபாடுகளாலும் இறை அருளால் மீண்டு நலமுடன் இருக்கிறேன்.
இருப்பினும், கொரோனா தொற்று உலகில் பல மக்களை தற்போதும் பாதித்து வருகிறது. கொரோனாவை அலட்சியமாக கருதாமல், அவசியம் இருந்தால் மட்டும் மக்கள் வெளியில் செல்ல கேட்டுக் கொள்கிறேன். எந்தவொரு மனிதருக்கும், பிற மனிதருக்கு பாதிப்பு ஏற்படுத்த உரிமையில்லை என்பதை மனதில் கொண்டு வெளியில் செல்லும் போது, மாஸ்க் அணிந்து, சானிடைசர் உபயோகித்து, தனிமனித இடைவெளி கடைபிடித்து, சுயபாதுகாப்பை உறுதிசெய்து நோய்தொற்று பரவாமல் தடுத்திடுவோம்.
கொரோனாவை வீழ்த்துவோம்.
நன்றி, வணக்கம்
உழைப்பவரே உயர்ந்தவர்
என்றும் அன்புடன்
ரா.சரத்குமார்
நிறுவனத் தலைவர்
இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.