சுரண்டை அருகே ஒரே குடும்பத்தில் 4 பேர் விஷம் குடித்தனர்: கணவர் சாவு
1 min read4 people in the same family drank poison: husband dies Near Surandai
29-/12/2020
சுரண்டை அருகே ஒரே குடும்பத்தில் 4 பேர் விஷம் குடித்தனர். இதில் கணவர் இறந்தார். அவருடைய மனைவி, 2 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கூலி தொழிலாளி
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள குலையநேரி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (40), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சீதாலட்சுமி (31). இவர்களுடைய மகள்கள் அழகுபார்வதி (8), பவிஷ்கா (6).
கண்ணனின் சொந்த ஊர் புளியங்குடி ஆகும். அவர் குலையநேரியில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கண்ணன் தினமும் மது குடித்து விட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று மதியம் கண்ணன் குடும்பத்துடன் சுரண்டையில் உள்ள உறவினர் வீட்டு திருமண விழாவில் கலந்து கொள்ள சென்றார். அப்போது கண்ணன் தனது மனவைி சீதாலட்சுமியின் உறவினர்களிடம், தனது மனைவி அடிக்கடி தன்னிடம் சண்டை போடுவதாகவும், இதனால் அவளை பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்து விடுவேன் என்று கூறியதாகவும் தெரிகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து வீட்டுக்கு வந்தனர்.
விஷம் குடித்தனர்
நேற்று மாலை 6.30 மணியளவில் கண்ணன், சீதாலட்சுமி, அழகுபார்வதி, பவிஷ்கா ஆகிய 4 பேரும் காபியில் விஷம் கலந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணன் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேரும் மேல் கிசிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்ததும் சுரண்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். குடும்ப பிரச்சினை அல்லது கடன் தொல்லை காரணமாக அவர்கள் விஷம் குடித்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.