இந்தியாவில் 7 பேருக்கு உருமாறிய கொரோனா
1 min read7 Person affected by Corona transformed in India
29-/12/2020
பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களில் 7 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உருமாறிய கொரோனா
உருமாறிய கொரோனா வைரஸ் முதன்முதலில் பிரிட்டனில் பரவியது. இந்த உருமாறிய வைரஸ் பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், பிரிட்டனுடனான விமான போக்குவரத்தை இந்தியா உள்பட பல நாடுகள் தடை செய்தன.
ஆனாலும், உருமாறிய கொரோனா வைரஸ் இத்தாலி, பிரான்ஸ், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு பரவியது. இதனால், மக்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.
இப்போது பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களில் 116 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது. அவர்களுக்கு உருமாறிய கொரோனா தான் பரவியுள்ளதா? என்பதை கண்டறிய அவர்களது பரிசோதனை மாதிரிகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ஐசிஎம்ஆர்) ஆய்வுகளை மேற்கொண்டது.
6 பேருக்கு
இந்த நிலையில், இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக ஐசிஎம்ஆர் இன்று அறிவித்துள்ளது. பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரத்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.
பெங்களூருவை சேர்ந்த 3 பேருக்கும், ஐதராபாத்தை சேர்ந்த 2 பேருக்கும், புனேவை சேர்ந்த 1 நபருக்கும் உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கியுள்ளதால் மக்கள் சற்று கலக்கம் அடைந்துள்ளனர்.
தமிழகம்
தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது
பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களில் இதுவரை 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா உறுதியாகியுள்ளது. அவருக்கு தனி அறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கொரோனா தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. உருமாறிய கொரோனாபாதித்தவருடன் தொடர்பில் இருந்த 15பேருக்கு கொரோனா இல்லை.
தமிழகத்தில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.