அரசியலுக்கு வரமாட்டேன்; ரஜினி பகிரங்க அறிவிப்பு
1 min readI will not come to politics; Rajini Open statement
29.12.2020
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டேன் என்று பகிரங்கமாக அறிவித்து விட்டா£ர். உடல்நிலையை கருத்தில் கொண்டு தான் கட்சி துவங்கவில்லை என்றும், அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
ரஜினி அரசியல்
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் ஏற்கனவே அறிவித்து இருந்தார். ஆனால் அவரது உடல்நிலை குறித்து இணைய தளத்தில் தகவல் வந்ததை அடுத்து அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்று பேசப்பட்டது.
இதனை அடுத்து அவர் தான் அரசியலுக்கு வருவதாகவும், கட்சி பெயர், கொடி போன்ற தகவல்களை டிசம்பர் 31&ந் தேதி அறிவிப்பேன் என்றும் கூறினார்.
வரமாட்டேன்
அவரது கருத்துபடி நாளை மறுநாள் கட்சியை பற்றிய அறிவிப்பு வரவேண்டும். ஆனால் இன்று ( செவ்வாய்க்கிழமை) திடீரென்று தனது முடிவை மாற்றிவிட்டார்.
இதுபற்றி ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
சிறுநீரக பாதிப்பு
என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கு எனது அன்பான வணக்கம். ஜனவரியில் கட்சித் தொடங்குவேன் என்று அறிவித்து மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஐதராபாத் சென்றேன். கிட்டத்தட்ட 120 பேர் கொண்ட படக்குழுவினருக்கு தினமும் கொரோனா பரிசோதனை செய்து கட்டுப்பாட்டோடு இருந்தும் 4 பேருக்கு கொரோனா இருக்கிறது என்று தெரியவந்தது. உடனே இயக்குனர் படப்பிடிப்பை நிறுத்தி எனக்கு உட்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வித்தார்.
எனக்கு கொரோனா நெகடிவ் வந்தது. ஆனால் எனக்கு ரத்தக் கொதிப்பில் அதிக ஏற்றத் தாழ்வு இருந்தது. மருத்துவ ரீதியாக எக்காரணத்தைக் கொண்டும் எனக்கு ரத்தக் கொதிப்பில் தொடர்ந்து ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாது. அது என்னுடைய மாற்று சிறுநீரகத்தை கடுமையாக பாதிக்கும். ஆகையால் என்னுடைய மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர்களின் மேற்பார்வையில் மூன்று நாட்கள் மருத்துவமனையில் கண்காணிப்பில் இருக்க நேரிட்டது.
என் உடல்நிலை கருதி படத்தின் தயாரிப்பாளர், மீதமுள்ள படப்பிடிப்பை ஒத்திவைத்தார். இதனால் பல பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு, பல கோடி ரூபாய் நஷ்டம். இவை அனைத்துக்கும் காரணம் என்னுடைய உடல் நிலை. இதை ஆண்டவன் எனக்கு கொடுத்த ஒரு எச்சரிக்கையாகத்தான் பார்க்கிறேன்.
நான் கட்சி ஆரம்பித்த பிறகு ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் மூலமாக மட்டும் பிரச்சாரம் செய்தால் மக்கள் மத்தியில் நான் நினைக்கும் அரசியல் எழுச்சியை உண்டாக்கி தேர்தலில் பெரிய வெற்றியை பெற முடியாது.
இந்த யதார்த்தத்தை அரசியல் அனுபவம் வாய்ந்த யாரும் மறுக்கமாட்டார்கள். நான் மக்களை சந்தித்து கூட்டங்களை கூட்டி, பிரச்சாரத்திற்கு சென்று ஆயிரக்கணக்கான ஏன் லட்சக்கணக்கான மக்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
இப்போது இந்த கொரோனா உருமாறி புது வடிவம் பெற்று இரண்டாவது அலையாக வந்து கொண்டிருக்கிறது. என் உயிர் போனாலும் பரவாயில்லை. நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேன்.
எனக்கு ஏற்பட்ட வலி
நான் அரசியலுக்கு வருவேன் என சொல்லி இப்போது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலு விதமா என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.
ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன். இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும்.
இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.