தி கிரேட் பாதர் (விமர்சனம்)
1 min read
The Great Father (Review)
நடிகர் மம்முட்டி, சினேகா, ஆர்யா உள்பட பலர் நடித்த படம் தி கிரேட் பாதர். மலையாளத்தில் வெளியான இந்தப் படத்தை தமிழில் டப் செய்துள்ளனர். இது ஒரு டப்பிங் படம் என்று தெரியாத அளவுக்கு படத்தை அமைத்து இருக்கிறார்கள்.
குற்றவாளியை யார் முதலில் கண்டுபிடிப்பது என்பதில் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கும் ஒரு சிறுமியின் தந்தையுக்கும் நடந்த போட்டிதான் கதை. இந்தப் போட்டியில் சிறுமியின் தந்தையாக மம்முட்டியும் போலீஸ் அதகாரியாக ஆர்யாவும் நடத்திருக்கிறார்கள்.
மம்முட்டி பிரபல காண்டிராக்டர். அவரது மனைவி சினேகா டாக்டர். இவர்களது மகள் அனிகா அவர்கள் குடியிருக்கும் பகுதியிலேயே ஒருவனால் கற்பழிக்கப்படுகிறாள். சிறுமிக்கு ஏற்பட்ட காயத்தை வீட்டில் இருந்தபடியே சிகிச்சை அளிக்க மம்முட்டி கூறுகிறார். காரணம் இந்த விசயம் வெளியே தெரியக்கூடாது என்று அவர் நினைக்கிறார். ஆனால் சினேகாவோ மகளை ஆஸ்பத்திரியில் அனுமதிக்க வேண்டும் என்று கூறி ஆஸ்பத்திரியில் சேர்த்துவிடுகிறார்.
அனிகாவைப்போல் பல சிறுமிகள் கற்பழிக்கப்பட்டு கொலையும் செய்யப்பட்ட சம்பவம் தெரிகிறது. மகளை கெடுத்தவனை பழிவாங்க துடிக்கிறார் மம்முட்டி. அதே நேரம் இதுபற்றி விசாரணை நடத்தி வரும் ஆர்யா சட்டப்படி நின்று குற்றவாளியை கண்டுபிடிக்க நினைக்கிறார். இவர்கள் இருவருக்கும் கடுமையான போட்டி. இதில் வெற்றிபெற்றது கதையின் நாயகன் மம்முட்டிதான்
இறுதியில் குற்றவாளியை கண்டு பிடிக்கும்போதுதான் அவன் தன்னுடைய அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவன் என்று மம்முட்டிக்கு தெரியவருகிறது. அவனை கொன்றுவிடுகிறார்.
அலட்டிக்காத மம்முட்டியின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. ஆனால் படத்தின் பிற்பகுதியில் அவரை அதிரடி கதாநாயகனாக மாற்றியுள்ளனர். ஆர்யாவை சண்டைகாட்சிக்காகவே படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள். சிறுமியாக வந்த அனிகா நன்றாக பிரகாசிக்கிறார். சினேகா தனக்கு கொடுத்த பாத்திரத்தை செம்மையாக செய்துள்ளார். பிள்ளை கற்பழிக்கப்பட்டு கிடந்ததை பார்த்த தந்தை மம்முட்டி அமைதி காப்பது கதைக்கு சரிதான். ஆனால் முகத்தில் சற்று கோபத்தையும் பயத்தையும் காட்டியிருக்கலாம்.
சாதாரண கிரைம் கதையை கொஞ்சம் சுற்றி வைத்து கொண்டு போய் இருக்கிறார்கள். இதனால் இடையில் தூக்கம் கண்ணை தழுவுகிறது.
படத்தை இயக்கி இருப்பவர் ஹனீப் அடேனி. ஸ்லோ மோசன் காட்சிகள்தான் இந்த இவரது ஸ்டையிலோ. போலீசில் எதையும் சொல்லிவிடாதே என்று மகளிடம் மம்முட்டி கூறும்போது திரிஷம்(பாபநாசம்) படத்தின் நினைவு வருகிறது. அந்தப் படத்தின் கருதான் இந்த படம் உருவாவதற்கு காரணமாக இருக்குமோ?
-கடையம் பாலன்