கர்நாடகத்தில் ஒரே நாளில் 25 ஆசிரியர்களுக்கு கொரோனா
1 min read
Corona for 25 teachers in one day in Karnataka
6.1.2021
கர்நாடகத்தில் ஒரே நாளில் 25 ஆசிரியர்களுக்கும் 5 மாணவர்களுக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.
பள்ளிக்கூடம் திறப்பு
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடுமுழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25&ந் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பள்ளிக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டன. தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாததால் ஆன்லைன் மூலமாக மாணவ-மாணவிகளுக்கு பாடம் கற்பிக்கப்பட்டு வந்தது.
தற்போது கொரோனா குறைந்து வருவதால் சில மானிலங்களில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. கர்நாடக மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பி.யூ.சி. இறுதியாண்டு கல்லூரிகள் மட்டும் திறக்கப்பட்டன. இதையடுத்து மாநிலத்தில் பள்ளிகளையும் திறக்க மாநில அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தது.
இந்த நிலையில், கர்நாடகத்தில் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் கடந்த 1-ந்தேதி முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. மாணவ-மாணவிகள் ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் வந்தனர்.
ஆசிரியர்களுக்கு கொரோனா
ஆனால் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டதில் இருந்து ஆசிரியர்களும், மாணவ&-மாணவிகளும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. நேற்று முன்தினம்( திங்கட்கிழமை) ஹாவேரி, சிக்கமகளூருவில் 3 ஆசரியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றிய பள்ளிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று(செவ்வாய்க்கிழமை) ஒரே நாளில் மாநிலத்தில் 25 ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் 5 மாணவ-மாணவிகளுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று ஆசிரியர்கள், மாணவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி வருகிறார்கள். கர்நாடகத்தில் பள்ளி திறந்ததும் ஆசிரியர்களும், மாணவர்களும் கொரோனா தொற்று ஏற்பட்டது பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.