போலீஸ் விசாரணைக்கு பயந்து காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை
1 min readYoung man commits suicide for fear of police investigation
6.1.2021
காதல் திருமணம் செய்த வாலிபரை விசாரணைக்கு நேரில் ஆஜராக போலீசார் வற்புறுத்தியதால் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காதல் திருமணம்
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள கந்தபுரத்தை சேர்ந்தவர் மணிவாசகன். இவரது மகன் சவுந்திரராஜன் (வயது 31). இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை பழங்காநத்தம் பகுதியில் மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கும் அவருடன் வேலை பார்த்த அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் மகள் பிரசாந்திக்கும் (22) இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இதுகாதலாக மாறியது. இதை பிரசாந்தியின் தந்தை கண்டித்துள்ளார்.
இதனால் சவுந்திரராஜன் வேலையை விட்டு விட்டு ஊருக்கு வந்து விட்டார். ஆனாலும் காதலர்கள் இருவரும் செல்போன் மூலம் பேசி காதலை வளர்த்து வந்துள்ளனர். கடந்த 4 மாதத்திற்கு முன்பு உடன்குடி கோவிலில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
ஆட் கொணர்வு மனு
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசாந்தி மதுரைக்கு சென்று வருவதாக கூறி சென்றார். ஆனால் திரும்பி வரவில்லை. இதையடுத்து தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு மதுரை ஐகோர்ட்டில் சவுந்திரராஜன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். மதுரை போலீசார் பிரசாந்தியை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.
இதற்கிடையே பிரசாந்தி அந்த பகுதியில் உள்ள மகளிர் போலீஸ் நிலையத்தில், தனது கணவருடன் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி புகார் செய்தார். அதன்பேரில் மகளிர் போலீசார், சவுந்திரராஜனை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
ஆனால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறி திருச்செந்தூர், மெஞ்ஞானபுரம் போலீஸ் நிலையங்களில் ஆஜராவதாக வக்கீல் மூலம் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு சவுந்திரராஜன் மனு அனுப்பி உள்ளார். ஆனால் மகளிர் போலீசார் விசாரணைக்கு நேரில் வருமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை
இதனால் விரக்தி அடைந்த சவுந்திரராஜன் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் மெஞ்ஞானபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சவுந்திரராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.