“அரசியலுக்கு வரமாட்டேன்-; ரசிகர்கள் என்னை வேதனைப்படுத்த வேண்டாம்” ரஜினி அதிரடி பதில்
1 min read
“I will not come to politics-; Fans don’t bother me ” Rajini Action Response
11.1.2021
அரசியலுக்கு வரமாட்டேன் என்றும் என்னை வேதனை படுத்த வேண்டாம் என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
ரஜினி அரசியல்
ஒவ்வொரு படம் வெளியாகும்போது அந்த படம் சம்பந்தப்பட்டவர்கள் ரஜினி அரசியலுக்கு வருவது நிச்சயம் என்று கூறி அவரது ரசிகர்களை உசுப்பி விட்டனர். அதோடு பொதுத் தேர்தலின்போது ரஜினிகாந்த் கருத்து, அறிவுரை, யாருக்கு ஓட்டுப்போடவேண்டும் என்று சொல்வார். இது அவர் அரசியலுக்கு வருவது நிச்சயம் என்று ரசிகர்கள் நம்பி இருந்தனர்.
இந்த நிலையில் ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பிறகு ரஜினியின் வாய்ஸ் தொண்டர்களை உற்சாகமூட்டியது. சில தலைவர்கள் அவரை அரசியலுக்கு வர வேண்டும் என்று குரல் கொடுத்தனர். நேரிலும் வற்புறுத்தினார்கள். இதன்காரணமாக அவர் அரசியலுக்கு வருவது நிச்சயம் என்றும் ஜனவரி மாதம் கட்சியின் பெயர் அறிவிக்கப்படும் என்றும் பகிரங்கமாகவே அறிவத்தார். கட்சி தொடங்குவதற்கான ஏற்பாடுகளையும் தொடங்கிவிட்டார். கட்சிக்கு ஆலோசகர், பொறுப்பாளரையும் நியமித்தார். ரசிகர்களும் பூத் கமிட்டி தொடங்க ஆட்களை திரட்டினார்கள்.
ரசிகர்கள் போராட்டம்
இந்த நிலையில்தான் அண்ணாத்த படப்பிடிப்பின்போது அவருக்கு ரத்த அழுத்தம் சீராக இல்லாமல் போனது. இதனால் அவர் அரசியலுக்கு வரமாட்டேன் என்று அறிக்கை மூலம் கூறினார். அவர் பொறுப்பாளராக நியமித்த ரஜினிகாந்த் தமிழருவி மணியன் இனி நான் அரசியல்பக்கமே வரமாட்டேன் என்று கூறிவிட்டார்.
ஆனால் ரசிகர்களில் ஒரு பகுதியினர் ரஜினியின் முடிவை ஏற்றுக் கொண்டாலும், இன்னொரு பகுதியினர் தேரை இழுத்து தெருவில் விட்ட கதையாகிவிட்டதே என்று கூறிக்கொண்டு இருந்தனர். அவர்கள் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று சென்னையில் அமைதியான முறையில் போராடினார்கள்.
இது ரஜினியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை அடுத்து அவர் அரசியலுக்கு கண்டிப்பாக வரமாட்டேன் என்று திட்டவட்டமாக இப்போது அறிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:&
வேதனை
என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கு, நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று சிலர், ரஜினி மக்கள் மன்ற பதவி பொறுப்பிலிருந்தும், மன்றத்திலிருந்தும் நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து, சென்னையில் ஒர் நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள்.
கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுக்கள். இருந்தாலும் தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனையளிக்கிறது.
தலைமையின் வேண்டுகோளை ஏற்று, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத மக்கள் மன்றத்தினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.
நான் ஏன் இப்பொழுது அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன். நான் என் முடிவை கூறிவிட்டேன்.
தயவு கூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டுமென்று யாரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ரஜினிகாந்த கூறினார்.