தெலுங்கானாவில் 21 பெண்களை கொலை செய்த “சைக்கோ” கைது
1 min readPsycho arrested for killing 21 women in Telangana
28/1/2021
தெலங்கானாவில் அடுத்தடுத்து 21 பெண்களை கொலை செய்த “சைக்கோ” வை போலீசார் கைது செய்தனர்.
சினிமா பாணியில்
சிவப்பு ரோஜாக்கள் என்ற படத்தில் கதாநாயன் கமல்ஹாசன் தொடர்ந்து பல பெண்களை கொலை செய்வார். கதாநாயகன் சிறுவனாக இருந்தபோது அவன் மீது ஆசைப்பட்ட ஒரு பெண், தான் சிக்கும்போது அந்த சிறுவன் மீதே பழியை போட்டுவிடுவாள். இதனால் அவர் தொடர் கொலை செய்யும் அளவுக்கு சென்று வீடுவான்.
அதேபோல் தெலுங்கானாவில் ஒரு சைக்கோ 21 பெண்களை கொலை செய்துள்ளான். அது பற்றிய விவரம் வருமாறு:&
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள ஜூபிலி ஹில்ஸ் பகுதியை சேர்ந்தவர் கவலா அனந்தையா, இவர் கடந்த டிசம்பர் மாதம் 30 ந்தேதி தன்னுடைய மனைவி வெங்கடம்மாவை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தார். போலீசார் இதுபற்றி விசாரித்து வந்த நிலையில் 4 நாட்களுக்கு பிறகு அந்த பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் அவரின் சடலம் கிடந்தது. முகம் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்ததால் அவர் கொலை செய்யப்பட்டதும் உறுதியானது. இதன்பேரில் போலீசார் விசாரணணை நடத்தியதில் அது மாயமான வெங்கடம்மா என்பது உறுதியானது.
இது தொடர்பாக போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தனர். அப்போது வெங்கடம்மா ஒருவருடன் ஆட்டோவில் செல்வது தெரியவந்தது. அவருடன் சென்றவர் யார்? என விசாரித்த போது தான் சங்கா ரெட்டி மாவட்டத்தை சேர்ந்த 45 வயதான ராமுலு என்பது உறுதியானது.
21 பெண்கள்
அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது தான் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகின. அவன் அடுத்தடுத்து 21 பெண்களை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
ராமுலுவுக்கு 21 வயதில் திருமணம் நடந்தது. அது பெற்றோர் பார்த்து நடத்தி வைத்த திருமணம்தான். ஆனால் சில மாதங்களிலேயே மனைவி, ராமுலுவை விட்டுவிட்டு வேறு ஒருவருடன் சென்றுவிட்டார். இதனால் பெண்கள் மீது கடும் ஆத்திரத்தில் இருந்த ராமுலு ஒரு கட்டத்தில் சைக்கோ கில்லராக மாறியிருக்கிறார்.
பெண்களை கண்டாலே கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் சுற்றி வந்த அவர், 2003 ஆம் ஆண்டு முதல் கொலைகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது. 2019 வரை 16 பெண்களை அவர் கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு (2020) மட்டும் 5 பெண்களை கொலை செய்துள்ளான்.
நகை, பணம்
கொலை செய்த பிறகு பெண்களிடம் இருந்து நகை, பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி விடுவதும் ராமுலுவின் வழக்கமாக இருந்துள்ளது. சில பெண்களை கொலை செய்தபோது அவன் பிடிபட்டுள்ளான். ஆனால் ஜாமீனில் வெளியே வந்து அடுத்தடுத்து கொலைகளை அரங்கேற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. கடைசியாக கைதான வழக்கில் இருந்து தப்பி தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது ராமுலு சிக்கியுள்ளான்.
அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக காணாமல் பெண்களின் பட்டியலை தயாரித்து வரும் போலீசார், அதை வைத்து ராமுலுவிடம் விசாரணை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.