சுதாகரன் மேலும் ஒராண்டு சிறையில் இருக்க திட்டம்
1 min readSudhakaran plans to spend another year in jail
6.2.2021
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சுதாகரன் மேலும் ஒராண்டு சிறையில் இருக்க திட்டமிட்டுள்ளார்.
சுதாகரன்
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை நிறைவடைந்ததை தொடர்ந்து சசிகலா, இளவரசி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். பெங்களூருவில் தனியார் சொகுசு விடுதியில் ஓய்வெடுக்கும் இவர்கள் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) சென்னை திரும்புகிறார்கள். சென்னை வரும் சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
சொத்துகுவிப்பு வழக்கை பொருத்தவரை சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் ஒரே நாளில் சிறை சென்றனர். 3 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.10 கோடி அபராதத் தொகை விதிக்கப்பட்டிருந்தது. சசிகலா, இளவரசி தரப்பில் அவர்களது வழக்கறிஞர்கள் அபராதத் தொகையை செலுத்தினர்.
இதன் அடிப்படையிலேயே சசிகலா ஜனவரி 27-ந்தேதியும், இளவரசி நேற்றும் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் சுதாகரனுக்கு ரூ.10 கோடி அபராதம் இன்னும் செலுத்தப்படவில்லை. அபராதத் தொகை செலுத்தாவிட்டால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
அபராதத் தொகை செலுத்தப்பட்டிருந்தால் டிசம்பர் மாதமே சுதாகரன் வெளியே வந்திருக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். சுதாகரன் 1996 முதல் 2017 வரை இந்த வழக்குக்காக 92 நாட்கள் சிறையில் இருந்துள்ளார்.
மேலும் ஓராண்டு
அந்த நாட்களை இப்போதுள்ள தண்டனையில் கழித்தால் அவர் டிசம்பர் 17-ந் தேதியே விடுதலை செய்யப்பட்டிருப்பார். சுதாகரனுக்கான அபராதத் தொகையை செலுத்ததாமதம் ஆகி வருகிறது. இதனிடையே அபராத தொகை செலுத்தப்பட்டால் உடனடியாக அவரை விடுதலை செய்யவும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் அபராத தொகையை செலுத்த சுதாகரனுக்கு விருப்பம் இல்லை என்று தெரிகிறது. இதனால் மேலும் ஒரு ஆண்டு சிறையில் இருக்க சுதாகரன் தயாராகி வருவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். என்றாலும் விரைவில் அவர் அபராத தொகையை கட்டுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.