அடிக்கடி கிருமி நாசினி பயன்படுத்தினால் கைரேகை அழியும்
1 min readFrequent use of disinfectant will destroy the fingerprint
18.2.20211
அடிக்கடி கிருமிநாசினியை பயன்படுத்தினால் கைரேகை அழியும் – மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கிருமி நாசினி
கொரோனா பரவ தொடங்கியதும் பொதுமக்கள் கிருமி நாசினி பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். இதனால் கொரோனா நம்மை அண்டாது என்பது உண்மைதான். ஆனால் அந்த கிருமி நாசினியால் கைரேகை அழியும் ஆபத்து இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.
இது தொடர்பாக அகமதாபாத்தை சேர்ந்த அன்சுல்வர்மன் என்ற தோல் மருத்துவ நிபுணர் கூறியிருப்பதாவது:-&
கைரேகை அழியும்
தற்போது பல்வேறு அலுவலகங்களில் பயோ மெட்ரிக் முறை மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. அடிக்கடி கிருமி நாசினியை பயன்படுத்துவதால் கைரேகை அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. சானிடைசர் உள்பட கிருமி நாசினியை அடிக்கடி பயன்படுத்துவதால் மேல் தோல் உரிதல் அதிகரிக்கும். 3 முதல் 4 சதவீதம் பேர் தங்களது கைரேகை பதிவாக வில்லை என்று என்னிடம் முறையிட்டார்கள்.
இதன் காரணமாக ஆல்கஹால் தன்மை கொண்ட சானிடைசருக்கு பதிலாக சோப்பை பயன்படுத்தலாம். அல்லது சானிடைசர் பயன்படுத்திய சிறிது நேரத்தில் கைகளை ஈரப்பதமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
கிருமி நாசினியால் கைரேகை அழியும் நிலை ஏற்படும் போது வைட்டமின் ‘ஏ’ வகையான பொருட்களை பயன்படுத்தினால் தோல் வேகமாக மீண்டும் உருவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவ கல்லூரி டாக்டர் பிரனாய்ஷா என்பவரும், கிருமி நாசினியை அடிக்கடி பயன்படுத்துவதால், கைரேகை அழியும் ஆபத்து இருப்பதாக கூறி உள்ளார்.
போபாலை சேர்ந்த நேகால் மிஸ்திரி என்பவர் கூறும்போது, “நான் நாள் ஒன்றுக்கு 6 முதல் 7 முறை கிருமி நாசினியை பயன்படுத்தினேன். தற்போது எனது கைரேகை சரியாக பதிவாகவில்லை. இது தொடர்பாக நான் தோல் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருகிறேன்” என்றார்.