128 கலைஞர்களுக்கு கலைமாமணி விருது; எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
1 min read
Kalaimamani Award for 128 Artists; Presented by Edappadi Palanisamy
20.2.2021
சென்னையில் 128 கலைஞர்களுக்கு கலைமாமணி விருதை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
கலைமாமணி விருது
தமிழக அரசு சார்பில் சினிமா உள்டப பல்வேறு கலைத் துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு கலைமாமணி விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2019, 2020ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது நேற்று அறிவிக்கப்பட்டது.
சிவகார்த்திகேயன், ராமராஜன், சரோஜா தேவி, சவுகார் ஜானகி, நடிகைகள் சங்கீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, மதுமிதா, கலைப்புலி எஸ் தாணு, ஐசரி கணேஷ், இசையமைப்பாளர்கள் டி இமான், தீனா உள்ளிட்ட 128 பேருக்கு கலைமாமணி விருதும், 6 பெண் கலைஞர்களுக்கு ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருதும் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
விழா
அவர்களுக்கு இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விருதுகளை வழங்கினார்.
நடிகர் ராமராஜன், நகைச்சுவை நடிகர் யோகிபாபு, பாடகி சுஜாதா, விசுவல் எடிட்டர் ஆண்டனி, நகைச்சுவை நடிகை மதுமிதா, இசையமைப்பாளர் இமான், திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகை சங்கீதா,நடிகர் ரவி மரியா, சின்னத்திரை நடிகை சாந்தி வில்லியம்ஸ், உள்ளிட்டோருக்கு, கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டன.
ஜெ.ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருதுகள், நடிகைகள் சரோஜா தேவி, சவுகார் ஜானகி, பழம்பெரும் பாடகி பி.சுசிலா உள்ளிட்டோருக்கும், பாரதி விருது சுகி சிவத்திற்கும், எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது வாணி ஜெயராமுக்கும், ஒரு லட்ச ரூபாய் காசோலையுடன் வழங்கப்பட்டன.
தங்கப்பதக்கம்
கலைமாமணி விருது பெறுவோருக்கு பரிசாக 5 சவரன் தங்கப்பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதேபோல் கலைமாமணி விருது பெற்ற, வறுமையில் வாடும் கலைஞர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் வழங்கப்பட்டது.
விருது பெற்ற நடிகர் சிவகார்த்திக்கேயன் கூறும்போது, “தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்ற நிகழ்வு, மிக மகிழ்ச்சியான தருணமாகும். இன்னும், அதிகமான, நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற உத்வேகத்தைத் விருது தந்திருக்கிறது. கோட்டைக்கு வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு குழந்தை இந்த இடத்தை பார்க்கிற போது ஏற்படுகிற பிரம்மிப்பு எனக்கு உள்ளது. இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நான் இன்னும் என்னுடைய திறமையை அதிகபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நினைக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.