5 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரிப்பு- மத்திய அரசு எச்சரிக்கை
1 min readCorona outbreak increase in 5 states
20/2/2021
இந்தியாவில் மராட்டியம் உள்பட 5 மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது. அங்கு கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு எச்சரித்து உள்ளது.
கொரோனா அதிகரிப்பு
இந்திய அளவில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பரவல் சற்று அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரப்படி, நேற்று(வெள்ளிக்கிழமை) 13,993 பேரிடம் கொரோனா கண்டறியப்பட்டது. நாடு முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,09,77,387 ஆக உயர்ந்துள்ளது. தற்போது நாடு முழுவதும் 1,43,127 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு, மராட்டிய மாநிலத்தில் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று( வெள்ளிக்கிழமை) மட்டும் அங்கு 6,112 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, அங்கு சில இடங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
5 மாநிலங்களில்…
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரப்படி, கேரளா, மராட்டியம், பஞ்சாப், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக தினசரி கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பஞ்சாபில், பாதிப்புகள் குறைந்த நிலையில், கடந்த சில நாட்களாக பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 383 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் கடந்த 7 நாட்களாக கொரோனாவினால், தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சட்டீஸ்கர் மாநிலத்திலும் பாதிப்பு அதிகரிக்கிறது. நேற்று மட்டும் அங்கு 259 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த மாநிலங்களில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், பரவல் சங்கிலியை உடைக்கவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது அவசியம் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
நாட்டின் மொத்த பாதிப்பில், 75.78 சதவீதம் பேர் மராட்டியம் மற்றும் கேரளாவில் தான் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் யூனியன் பிரதேசங்களில், கொரோனாவினால் யாரும் இறக்கவில்லை.
மேற்கண்ட தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மராட்டியம்
மராட்டியத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அனைவரும் முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறைகளை தீவிரமாக பின்பற்றவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் யவத்மாலில் 10 நாள் முழு ஊரடங்கும், அமராவதியில் வார இறுதி நாட்கள் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்கிடையே மராட்டியத்தில் இன்று 6,281- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏறத்தாழ மூன்று மாதங்களுக்குப் பிறகு மராட்டியத்தில் தொடர்ந்து 2-வது நாளாக கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்திற்கும் மேல் பதிவாகியுள்ளது. மும்பையில் மட்டும் 897- பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 40- பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 51 ஆயிரத்து 753- ஆக உள்ளது.
இதற்கிடையே கொரோனா விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மும்பை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.