கனடா டொரன்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை உருவாக்க ரூ.1 கோடி
1 min readRs 1 crore to create a Tamil seat at the University of Toronto, Canada
23.2.2021
கனடா டொரன்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை உருவாக்க ரூ.1 கோடி தமிழக இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பட்ஜெட்
துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு பாரம்பரியம்மிக்க பண்பாட்டைக் கொண்டிருப்பதுடன், தமிழ் மொழியானது உலகில் மிகத் தொன்மை வாய்ந்த மொழியாகவும் திகழ்கிறது. தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.தமிழ் பண்பாட்டைப் போற்றும் விதமாக, இந்த ஆண்டு முதல், தைப்பூசம் திருநாள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் அறிஞர்கள் மற்றும் தமிழ் மொழியின் மாண்பிற்காகப் போராடியவர்களுக்கு தொடர்ந்து சிறப்பு செய்யப்படுவதுடன், அவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ் அறிஞர்களுக்கான உதவித்தொகையை 497 நபர்கள் பெற்று வருவதுடன், தமிழ்மொழி பேசும் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்கப் போராடிய 137 எல்லை வீரர்களும் உதவித் தொகையைப் பெற்று வருகின்றனர்.தமிழ் அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் மொத்தமாக 78 விருதுகள் வழங்கப்படுவதுடன், தற்போது, அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது மற்றும் காரைக்கால் அம்மையார் விருது ஆகிய இரண்டு புதிய விருதுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
தமிழ் இருக்கை
மதுரையிலுள்ள உலகத் தமிழ்ச் சங்கத்திற்காக, 87,300 சதுர அடி பரப்பளவில் 37.25 கோடி ரூபாய் செலவில் பெருந்திட்ட வளாகம் கட்டப்பட்டுள்ளது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த ஆண்டுத் தொகுப்பு மானியமானது 5.98 கோடி ரூபாயிலிருந்து 24.92 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஹ¨ஸ்டன் பல்கலைக்கழகத்தைப் போன்றே, கனடாவிலுள்ள டொரன்டோ பல்கலைக் கழகத்திலும் தமிழ் இருக்கை அமைத்திட உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.