குடும்ப தலைவர் விபத்தில் இறந்தால் ரூ.4 லட்சம் ;- பட்ஜெட்டில் புதிய காப்பீட்டு திட்டம் அறிவிப்பு
1 min read
Rs 4 lakh in case of death of head of household in an accident; – New insurance scheme announced in the budget
23/2/2021
தமிழகத்தில் குடும்ப தலைவர்கள் விபத்தில் மரணம் அடைந்தால் ரூ.4 லட்சம் காப்பீடு வழங்கும் புதிய திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
காப்பீடு திட்டம்
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, புதிய அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்ஐசி மற்றும் யுனைடெட் காப்பீடு இந்தியா திட்டத்துடன் இணைந்து ஏழை மக்களுக்கு புதிய ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு திட்டம் தொடங்கப்படும். இதற்கான தொகையை தமிழக அரசே ஏற்கும் என கூறப்பட்டுள்ளது.
இதன்படி, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தில் இருக்கும் குடும்ப தலைவர் இயற்கை மரணம் அடைந்தால் ரூ.2 லட்சம் காப்பீடு வழங்கப்படும். குடும்ப தலைவர்கள் விபத்தில் மரணம் அடைந்தால், ரூ.4 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 55.67 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
27ந் தேதி வரை
இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் தமிழக இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் வரும் 25ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
பிப்ரவரி 25, 26-ம் தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதமும், பிப்ரவரி 27-ஆம் தேதி பட்ஜெட் விவாதத்திற்கு பதிலுரை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 25-ஆம் தேதி சித்த வைத்திய சிவராஜ் சிவகுமர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம், பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்களுக்கும் , உத்தரகாண்ட் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்.