மாணவி கற்பழிக்கப்பட்டதாக பரபரப்பு புகார்; மருத்துவ பரிசோதனையில் திடுக்கிடும் தகவல்
1 min readSensational complaint that student was raped; Startling information on medical examination
27.2.2021
எஸ்.எஸ்.எல்.சி. படிக்கம் மாணவியை சிலர் காட்டுப்பகுதியில் கற்பழித்துவிட்டதாக பரபரப்பு புகார் கூறப்பட்டது. இதனை அடுத்து அந்த மாணவியை போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு திடுக்கிடும் தகவல் கிடைத்தது.
எஸ்.எஸ்.எல்.சி. மாணவி
கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் எல்லாப்புரா தாலுகா நந்தோள்ளி கிராமத்தில் ஒரு இளம் பெண் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருகிறார்.
இந்த மாணவி திடீரென்று காணாமல் போனார். நீண்ட நேரத்திற்கு பிறகு அந்த மாணவி அழுது கொண்டே வீட்டுக்கு வந்தார். பெற்றோர் பதறியபடி என்னவென்று விசாரித்தனர்.
அப்போது அந்த மாணவி, தன்னை சிலர் கற்பழித்து விட்டதாக கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சம்பவம் பற்றி எல்லாப்புரா போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை கற்பழித்தவர்களை தேடும் பணியில் முற்பட்டனர்.
நாடகம்
அதோடு மாணவியை எல்லாப்புரா அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். அப்போது மாணவி கற்பழிக்கப்படவில்லை என்றும் அந்த மாணவி பொய் சொன்னதும் தெரியவந்தது.
இதனால் மாணவியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது ஆசிரியரும், பெற்றோர் கண்டித்ததால் இந்த கற்பழிப்பு நாடகம் ஆடியது தெரியவந்தது.
அந்த மாணவி சரிவர வீட்டுப்பாடம் செய்யாமல் பள்ளிக்கு சென்றுள்ளார். இதனால் தலைமை ஆசிரியர் அந்த மாணவியை கண்டித்து வந்துள்ளார். ஆனாலும் மாணவி தினமும் வீட்டுப்பாடம் எழுதாமல் பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.
இதனால் அதிருப்தி அடைந்த தலைமை ஆசிரியர், மாணவியின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து, மாணவி பற்றி புகார் கூறினர். எஸ்.எஸ்.எல்.சி. படித்து வரும் உங்கள் மகள் சரிவர படிப்பதில்லை. வீட்டு பாடங்களை சரிவர செய்வதில்லை. இப்படியே இருந்தால் அவர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வி அடைவார் எனக் கூறி, அவருக்கு அறிவுரை வழங்கும்படி கூறினார்.
இதைதொடர்ந்து வீட்டுக்கு வந்த மாணவியை, பெற்றோர் கண்டித்துள்ளனர். மேலும் பாடத்தில் கவனம் செலுத்தும்படி அறிவுரை கூறினர். இதனால் ஆத்திரமடைந்த மாணவி பெற்றோரை பழிவாங்க திட்டமிட்டு இந்த விஷ பரீட்சையில் இறங்கியுள்ளார். இதையடுத்து மாணவிக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.