எடப்பாடி பழனிசாமி குறித்த பேசிய ஆ.ராசா மன்னிப்பு கேட்டார்
1 min readSpeaking about Edappadi Palanisamy, A.Rasa apologized
29.3.2021
முதலஅமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு மன்னிப்பு கோருவதாக ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
ஆ.ராசா
முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க. எம்.பி.யுமான ஆ.ராசா, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றி இழிவாக பேசியதாக புகார் எழுந்தது. அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது. அவரது பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த புகார் மனு உரிய நடவடிக்கைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த புகார் மனு அடிப்படையில் ஆ.ராசா மீது 3 சட்டப்பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மன்னிப்பு
இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு மன்னிப்பு கோருவதாக ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “முதலமைச்சர் பழனிசாமி குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு மன்னிப்பு கோருகிறேன். 2 நாட்களுக்கு முன்னர் பெரம்பலூரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் முதலமைச்சர் குறித்து நான் பேசியதாக எழுந்த பிரச்சினை குறித்து தன்னிலை விளக்கம் அளித்தேன். என்றாலும் அதுகுறித்து விவாதம் தொடர்ந்ததால் கூடலூர் தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி குறித்தோ அவரது அன்னை குறித்தோ நான் தவறாகப் பேசவில்லை. நானும் ஒரு தாயின் 8-வது குழந்தை என்கிற முறையில் அப்படித் தவறாகப் பேசவில்லை என்று தெரிவித்தேன்.
ஆனாலும், முதலமைச்சர் எனது பேச்சால் காயப்பட்டுக் கண்கலங்கினார் என்கிற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைகிறேன். இடப்பொருத்தம் இல்லாமல் சித்தரிக்கப்பட்டு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட எனது பேச்சு குறித்து மனதின் அடி ஆழத்திலிருந்து வருத்தம் தெரிவிக்கிறேன். இன்னும் ஒருபடி மேலே போய் சொன்னால் முதலமைச்சர் பழனிசாமி அரசியலுக்காக அல்லாமல் உள்ளபடியே காயப்பட்டிருப்பதாக உணர்ந்தால் அவரிடம் எனது மனம் திறந்த மன்னிப்பைக் கோருவதில் தயக்கமில்லை.
தவறாக பேசவில்லை
முதல் அமைச்சருக்கும் அவரது கட்சிக்காரர்களுக்கும், நடுநிலையாளர்களுக்கும் நான் மீண்டும் குறிப்பிட விரும்புவது எனது பேச்சு இரண்டு தலைவர்களைப் பற்றிய தனிப்பட்ட விமர்சனமல்ல. பொது வாழ்வில் உள்ள இரண்டு அரசியல் ஆளுமைகள் குறித்த ஒப்பீடும், மதிப்பீடும்தான். முதலமைச்சர் பழனிசாமி மனம் காயப்பட்டது குறித்த எனது மனம் திறந்த மன்னிப்பைக் கோருகிறேன். பிரச்சினைக்கு உட்படுத்தப்பட்ட எனது 40 நிமிட உரையை மக்கள் முழுமையாக கேட்டால், நான் தவறாக பேசவில்லை என தீர்ப்பளிப்பர்” என்று அவர் கூறினார்.