கொரோனா தடுப்பூசி விலை உயர்வு ஏன்?; ‘சீரம் இந்தியா’ விளக்கம்
1 min read
Why Corona Vaccine Price Rise ?; Interpretation of ‘Serum India’
26/4/2–021
“பல்வேறு நாடுகளும், முன்கூட்டியே அளித்த நிதியை வைத்து, குறைந்த விலைக்கு ஏற்கனவே தடுப்பூசி வழங்க முடிந்தது. தற்போது, தயாரிப்பை அதிகரிக்க, அதிக முதலீடு தேவைப்படுவதால், விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது” என்று ‘சீரம் இந்தியா’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடான, பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஆஸ்ட்ராஜெனகா மருந்து தயாரிப்பு நிறுவனம் இணைந்து, கொரோனாவுக்கான ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை தயாரித்தன. இதை, மராட்டிய மாநிலம் புனேவைச் சேர்ந்த, ‘சீரம் இந்தியா’ நிறுவனம் தயாரித்து வினியோகித்து வருகிறது. இந்த தடுப்பூசியின், ‘டோஸ்’ ஒன்று, மத்திய அரசுக்கு, 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விலை உயர்வு
வரும், 1-ந் தேதி முதல், 50 சதவீத தடுப்பூசிகளை, மாநில அரசுகளும், தனியார் மருத்துவ மனைகளும், ‘சீரம் இந்தியா’ நிறுவனத்திடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய, மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது. இதையடுத்து, மாநில அரசுகளுக்கான தடுப்பூசியின் விலையை, ஒரு டோஸ், 400 ரூபாயாகவும், தனியார் மருத்துவமனைகளுக்கு, 600 ரூபாயாகவும், ‘சீரம் இந்தியா’ நிறுவனம் உயர்த்தியது.
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்து உள்ளன.
இது குறித்து, ‘சீரம் இந்தியா’ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
விலை உயர்வு ஏன்?
சந்தையில், மிக குறைந்த விலையில் கிடைக்கும் தடுப்பூசியாக, கோவிஷீல்டு உள்ளது.
துவக்கத்தில், இந்தியா உட்பட, பல்வேறு நாடுகளும், தடுப்பூசி தயாரிப்புக்கு முன்கூட்டியே நிதி அளித்ததை அடுத்து, அனைவருக்கும் குறைந்த விலையில் வினியோகம் செய்ய முடிந்தது.
தற்போது, நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருகிறது. இதனால் மக்கள் கடும் ஆபத்தில் உள்ளனர். எனவே, தடுப்பூசி தயாரிப்பை தொய்வில்லாமல் செய்யவும், திறனை அதிகரிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. இதற்கு பெரும் முதலீடுகள் தேவைப்படுகின்றன.
‘சீரம் இந்தியா’ தயாரிக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதி தடுப்பூசிகள் மட்டுமே, தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்யப்படும். கொரோனா தொற்று உட்பட, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் இதர மருத்துவ சிகிச்சைகளுக்கு ஆகும் செலவை விட, இந்த தடுப்பூசியின் விலை மிக குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.