கொரோனா பாதித்தவரை ஊருக்கு வெளியே தங்க வைத்ததால் இறந்த பரிதாபம்
1 min readcorona victim died while staying out of town
5.5.2021
ஆந்திரமாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட கூலித்தொழிலாளியை ஊருக்கு வெளியே தங்க வைத்தனர். அவருக்கு மருத்துவ வசதி இல்லாமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
கூலி்த்தொழிலாளிக்கு கொரோனா
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள கோயில் கிராமத்தை சேர்ந்த ஆசிரி நாயுடு என்பவர் கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார். இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து இவர் சொந்த ஊருக்கு சென்றார். அப்போது அவரது உறவினர்கள் உள்பட யாரும் அவரை ஊருக்குள் அனுமதிக்கவில்லை.
மேலும் ஊரிலிருந்து வெகு தொலைவில் உள்ள ஒதுக்குப்புறத்தில் அவர்களை தங்குமாறு கிராமத்தினர் தெரிவித்தனர். இதனால் ஊருக்கு வெளியே அவரது குடும்பத்தினர் ஒரு குடிசை போட்டு தங்கினர். ஆனால் அவர் தனது உடலை பராமரிக்க தேவையான எந்த வசதியும் செய்யவில்லை.
பரிதாப சாவு
மேலும் மருத்துவ சிகிச்சை எதுவும் எடுத்துக்கொள்ளாத நிலையில் அவர் உடல்நிலை மிகவும் மோசமானது. மூச்சுத்திணறல் காரணமாக நிலைகுலைந்து கீழே விழுந்தார். அவரது மகள் அவருக்கு தண்ணீர் கொடுப்பதற்காக அருகே சென்றபோது, தனது மகளுக்கும் தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தில் அவரது தாய் அவரை தடுத்து நிறுத்தினார். இருப்பினும் தந்தையின் துடிப்பை பார்க்க முடியாத மகள் இறுதியாக தண்ணீரை தந்தையின் வாயில் ஊற்றிய நிலையில் சில நிமிடங்களிலேயே குடும்பத்தினர் கண்ணெதிரே கூலித்தொழிலாளி துடிதுடித்து உயிரிழந்தார்.