இன்ஸ்பெக்டரிடம் திணறிய கண்ணாயிரம்/சிறுகதை
1 min read
Kannayiram with police Inspecter / Short story by thabasukumar
22-6-2021
கள்ள நோட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வாலிபரின் சைக்கிளில் கண்ணாயிரம் சென்றார். போலீஸ்நிலையம் வந்ததும் சைக்கிளிலிருந்து கண்ணாயிரம் இறங்கினார். உடனே அந்த இளைஞர், அண்ணே வேட்டியை இறக்கிவிட்டு போங்க. என்றார். கண்ணாயிரமும் சரி என்று வேட்டியை கீழே இறக்கிவிட்டார். பின்னர் அந்த வாலிபர், அண்ணே செருப்ப வெளியே கழற்றி போட்டுட்டுபோங்க என்று எச்சரித்தார்.
கண்ணாயிரம் சிரித்துக்கொண்டே, இந்த பிரச்சினை வரக்கூடாது என்றுதான் நான் செருப்பை போட்டுட்டுவரலை என்றார். சரி, உள்ளேபோகும்போது குனிந்தபடி கைகூப்பியபடி போங்க என்று அறிவுரை கூறினார்.
கண்ணாயிரத்துக்கு கொஞ்சம் பதட்டமாக இருந்தது. பஞ்சகல்யாணியை நினைத்துகொண்டு போலீஸ் நிலையத்துக்குள் மெல்ல, மெல்ல சென்றார். வாசலில் துப்பாக்கியுடன் நின்ற போலீஸ்காரருக்கு வணக்கம் போட்டார். அவர் மிரட்டும் குரலில் யார் நீ, யாரை பார்க்கணும் என்று கேட்டார். கண்ணாயிரம் தைரியத்தை வரவழைத்து கொண்டு நான் நானுங்க, பேரு கண்ணாயிரமுங்க இன்ஸ்பெக்டர் அய்யாவை பார்க்கணுமுங்க என்றார்.
ஓ.. எதற்கு என்று கேட்டார் போலீஸ்காரர்.
கண்ணாயிரம் உடனே இன்ஸ்பெக்டர் அய்யாதான் என்னை பார்க்கணுமுன்னு சொன்னாங்களாம். அதான் வந்தேன் என்று இழுத்தார்.
போலீஸ்காரருக்கு கோபம் வந்தது. என்ன கதைவுடுறீயா.. என்று கேட்டார். இல்லை சார் நம்புங்க சார் என்று கண்ணாயிரம் கூறினார். அந்த நேரத்தில் வெளியே வந்த இன்ஸ்பெக்டர் அங்கே என்னய்யா சத்தம் என்றார்.
போலீஸ்காரர் பணிவுடன் இவரு பேரு கண்ணாயிரமாம் உங்களை பார்க்கணுமாம் என்றார். உடனே கண்ணாயிரமா உடனே உள்ள அனுப்பு என்று கூறியபடி தனது அறைக்கு இன்ஸ்பெக்டர் சென்றார். அதை பார்த்ததும் யோவ் கண்ணாயிரம் சீக்கிரம் இன்ஸ்பெக்டர் ரூமுக்குள் போய்யா என்று போலீஸ்காரர் கத்தினார். கண்ணாயிரம் சரி என்றபடி இன்ஸ்பெக்டர் அறைக்குள் சென்றார். வாங்க கண்ணாயிரம் வாங்க வாங்க என்று இன்ஸ்பெக்டர் வரவேற்றார். கண்ணாயிரத்தால் நம்ப முடியவில்லை. கண்களை கசக்கி பார்த்துக்கொண்டார். என்ன கண்ணாயிரம் சேர்ல உட்காருங்க என்றார். கண்ணாயிரம் வேண்டாம் சார் நிற்கிறேன் என்றார். இன்ஸ்பெக்டர் உடனே கண்ணாயிரம் நீங்க அக்கியூஸ்டு இல்லை. எவிடன்ஸ். உங்களிடம் நிறைய விசாரிக்க வேண்டும். உட்காருங்க என்றார். கண்ணாயிரம் நாற்காலி விழும்பில் அமர்ந்தார். இன்ஸ்பெக்டர் மீசையை முறுக்கியபடி ஒண்நாட்ஒண் இரண்டு டீ சொல்லுய்யா என்றார். கண்ணாயிரம் முகத்தை துடைத்து கொண்டார்.
மிஸ்டர் கண்ணாயிரம் ஊருல உங்களை தெரியாத ஆளே கிடையாது போல. சின்ன புள்ள கூட உங்கள் பெயரை சொல்லுமுன்னு சொல்றாங்க என்று இன்ஸ்பெக்டர் புகழ்ந்தார்.
கண்ணாயிரம் மெல்ல அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை அய்யா என்று நெளிந்தார். வெட்கபடாதீங்க சமீபத்தில் உங்களை நாய் கடிச்சுதாமே… அந்த நாய் கூட உங்களை மாதிரி கத்துச்சாமே என்று இன்ஸ்பெக்டர் கேட்டார்.
அதற்கு அவர் சார், அது பொய்யி. அந்த நாய்குட்டி எலும்பை விழுங்கியதால் வீல் வீல் என்று கத்துச்சு அதை பார்த்துட்டு தப்பா கதை விட்டுட்டாங்க என்றார்.
அப்போது டீ வந்தது. கண்ணாயிரம் டீ சாப்பிடுங்க என்று இன்ஸ்பெக்டர் கூறினார். டீயில் என்ன இருக்குமோ தெரியலை குடிக்கலாம் வேண்டாமா என்று கண்ணாயிரம் விழித்தார். நீங்க குடிங்க சார் என்று இன்ஸ்பெக்டரிடம் கூறினார். இஞ்சி டீயை இன்ஸ்பெக்டர் பருகினார். அதைபார்த்து கண்ணாயிரமும் டீயை மெல்ல குடித்தார்.
அப்போது அடுத்த அறையில் இருந்து பயங்கர சத்தம். அய்யா அடிக்காதீங்கய்யா.. அய்யா அடிக்காதீங்கய்யா என்று கேட்டது. சொல்லுடா, சொல்லுடா என்று ஒருவரை போலீஸ்காரர் பிரம்பால் அடி பின்னினார்.
அந்த சத்தம் கேட்டதும் கண்ணாயிரத்துக்கு வியர்த்தது. டீகுடிக்க வச்சுட்டு நம்மையும் இப்படிதான் அடிப்பாங்களா என்று பதறினார். டீகுடிக்காமல் டம்ளரை கீழே வைத்தார்.
என்ன டீகுடிக்காம வைச்சிட்டீங்க டீசாப்பிடுங்க என்றார் இன்ஸ்பெக்டர். கண்ணாயிரம் யோசித்தார். என்ன பயப்படாதீங்க நீங்க அக்கியூஸ்ட்டு இல்ல எவிடன்ஸ் அதோ அடிவாங்குறானே அவன் அக்கியூஸ்ட்டு. கோவிலில் திருடிவிட்டு நகைகளை எங்கே மறைச்சுவைச்சிருக்க என்று கேட்டால் சொல்லமாட்டேங்கிறான். ஒரு வாரமா அடிச்சு பார்த்தாச்சு ஒண்ணும் நடக்கல. டீ வாங்கிகொடுத்து பார்த்தாச்சு. பிரியாணி வாங்கி கொடுத்து பார்த்தாச்சு. இனி லாடம் கட்டினாதான்சரி வரும். நீங்க டீகுடிங்க என்று இன்ஸ்பெக்டர் கூறினார்.
கண்ணாயிரத்துக்கு டீகுடிக்கிற எண்ணமே போயிட்டு. சும்மா டீகுடிக்காம மாதிரி நடித்தார்
.
லேசாக அந்த அக்கியூஸ்டை எட்டிப்பார்த்தார்.
சார்… இவன அடிக்கடி கடற்கரையில தெற்கு பக்கம் ஒரு பாலம் இடிஞ்சி கடலுக்குள்ளாற போகுமில்ல… அதுக்குப்பகத்திலத்தான் அடிக்கடி நிப்பான்… என்றார் கண்ணாயிரம்.
யோ, அவன அடக்கிறத நிறுத்து… என்ற இன்ஸ்பெக்டர் 2 போலீசாலை அழைத்து கண்ணாயிரம் சொன்ன இடத்தில் ரகசியமாக சோதனையிடச் சொன்னார்.
சரி.. மிஸ்டர் கண்ணாயிரம் நம்ம பாயிண்டுக்கு வருவோம். புதுவை பஸ்நிலையத்தில் மர்ம வாலிபர் உங்களிடம் கள்ள நோட்டு கொடுத்தது கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது. அவன் முகம் சரியா தெரியலை. அவனை நேராக பார்த்த சாட்சி நீங்க தான். அன்னைக்கு என்ன நடந்துச்சு…சொல்லுங்க என்று கண்ணாயிரத்திடம் இன்ஸ்பெக்டர் கேட்டார். கண்ணாயிரம் அதுவா சார், அன்னைக்கு மதியம் மூன்று மணி இருக்கும் பார்த்துக்கிடுங்க..நான் அங்குள்ள ஒரு டீக்கடையிலே … என்று இழுத்தார். இன்ஸ்பெக்டர்… ம்.. சொல்லுங்க நிப்பாட்டாதீங்க…. சொல்லுங்க.. பயப்படாதீங்க… நாங்கள் உங்களுக்கு பாதுகாப்பாக இருப்போம்..கமான்..கமான் என்றார் இன்ஸ்பெக்டர்.
உடனே கண்ணாயிரம்… சார் அவசரப்படுத்தாதீங்க… நான் மெதுவா செல்லுறேன்…நான் டீக்கடையில் டீக்குடிச்சுட்டு நின்னேனா… அப்பம் .. ஒரு வாலிபர் என்னை நீக்கி ஓடிவந்தாரா.. எனக்கு ஒரே பயமா போச்சு… அப்படியே ஒதுங்கி நின்னேனா.. அந்த வாலிபர் என்ன பார்த்து சார். சார். என்று கூப்பிட்டான். அதுல நான் கொஞ்சம் சிலிப்பாயிட்டேன்.. என்னப்பா வேணும்னு கேட்டேன். அப்பம் பாருங்க அவன் என்னை பார்த்து சார், நூறு ரூபாய்க்கு சில்லறை குடுங்க சார். பஸ்போகப் போகுது சீக்கிரம் குடுங்க சார் என்றான். நானும் மதிமயங்கி போய் அவனிடமிருந்து நூறு ரூபாயை வாங்கிகிட்டு சில்லறையை கொடுத்தேனா இல்லையா. அவன் அதை எண்ணிக் கூடபார்க்காம ஒரு வார்த்தை சொல்லிட்டு வேகமாக சென்னை செல்லும் பஸ்சில் ஏறி போயிட்டான் சார் என்றார். உடனே இன்ஸ்பெக்டர், சரி அவன் ஒரு வார்த்தை சொன்னானு சொன்னீங்களே என்ன என்ன சொன்னான் சொல்லுங்க, சொல்லுங்க என்றார். கண்ணாயிரம் நகத்தை கடிச்சிக்கிட்டு அவன் என்னைப்பார்த்து நீங்க ரொம்ப நல்லவங்க அப்படின்னு சொன்னான் பாருங்க நான் அசந்து போயிட்டேன். நம்மள பாராட்டுறதுக்கும் ஒரு ஆளு இருக்குன்னு நெகிழ்ந்து போயிட்டேன் பாருங்க. அப்புறம் வீட்டுல போய் பார்த்தப்பதான் தெரிஞ்சது எனக்கு வைச்சான்பாருங்க ஆப்புன்னு தெரிஞ்சது. அவன் என்னிடம் கொடுத்தது கள்ள நோட்டு ன்னு தெரிஞ்சது. காலையிலே உங்கள பார்த்து கம்ப்ளைன்ட் பண்ணணுமுன்னு நினைச்சேன். தாமதமாகிவிட்டது. என்றார்.
இன்ஸ்பெக்டர் அதை சுவாரசியமாக கேட்டார். சரி. அந்த கள்ள நோட்டை எங்கே என்று கேட்டார். கண்ணாயிரம் சிரித்தபடி, அய்யா கேட்பீங்கன்னு பத்திரமா கொண்டு வந்துட்டேன். என்று கூறியபடி கால்சட்டைபைக்குள்ளிருந்து நூறு ரூபாயை எடுத்து இன்ஸ்பெக்டரிடம் நீட்டினார். அவர் அதை வாங்கி பார்த்தார். ம்…. சரி அந்த வாலிபர் எப்படி இருந்தான்.. அங்க அடையாளம் சொல்லுங்க என்றார். கண்ணாயிரம் உடனே சார். இங்கேபாருங்க..டிப்டாப்பா டிரஸ்போட்டிருந்தான். கழுத்தில் கறுப்புகயிறு இருந்துச்சு. ஐந்து அடி உயரம் இருந்தான் என்று இழுத்தார். இன்ஸ்பெக்டர் பொறுமை தாங்காமல் அவன் எப்படியா இருந்தான் என்று கேட்டார். கண்ணாயிரம் வேகமாக, சார் அவன் கறுப்பா பயங்கரமா இருந்தான் சார் என்றார். உடனே இன்ஸ்பெக்டர் கண்ணாயிரத்தை முறைத்தார். ஏன்என்றால் இன்ஸ்பெக்டர் கறுப்பாக இருந்தார். அவர் கோபப்படுவதை உணர்ந்த கண்ணாயிரம் அச்ச்சோ. சார் நான் உங்களை சொல்ல. நீங்க கோபப்படாதீங்க.. நீங்க சினிமா நடிகர் விணுசக்கரவர்த்தி மாதிரி அழகா இருக்கீங்க என்று புகழ்ந்தார்.
அப்போதும் அவருக்கு கோபம்குறைந்திருக்குமா குறையவில்லை. நிலைமை விபரீதமான உணர்ந்த கண்ணாயிரம் எதிரே இருந்த சுவர் கடிகாரத்தை பார்த்தார். பனிரெண்டு ஐந்து நிமிடம் இருந்தது. அடடா எமகண்டம் நெருங்குதடா..சீக்கிரம் இடத்தை காலிபண்ணணுமுன்னு நினைத்தார். இன்ஸ்பெக்டரிடம் சார் நீங்க மூன்று முகம் ரஜினி மாதிரி நல்ல கெட்டப்பில் தெரியுறீங்க… நடந்தா அப்படியே தெரியும் சார் என்று ஐஸ்வைத்தார். அதில் உருகிய இன்ஸ்பெக்டர், மிஸ்டர் கண்ணாயிரம் உங்கள் தகவலுக்கு நன்றி. மர்ம வாலிபரை பிடிக்க நீங்க உதவிகரமாக இருக்கணும்.. இந்த கம்ப்யூட்டரில் இருக்கும் உருவத்தை பாருங்க. மர்ம வாலிபர் போல் இருக்குதா என்று கேட்டார். கண்ணாயிரமும் ஆமா என்று தலையாட்டினார். சரி நீங்கபோகலாம்.எப்போ கூப்பிட்டாலும் வரணுமுன்னு இன்ஸ்பெக்டர் அனுப்பிவைத்தார்
அப்பாட ஆள விடுங்க சாமி என்று கண்ணாயிரம் போலீஸ் நிலையத்திலிருந்து வெளியே வந்தார்.
வரும்போது அடிவாங்கிய அக்கியூஸ்டை ஒரக்கண்ணால் பார்த்தார். அவன் கண்ணாயிரத்தை பார்த்து கும்பிடு போட்டான். அவரு வந்தபிறகுதான் என்னை போலீஸ் அடிக்கிற நிப்பாடினாங்க என்று கண்ணாயிரத்தின் மீது ஒரு மரியாதை பிறந்துவி்ட்டது.
கண்ணாயிரம் போலீஸ்நிலையத்திற்கு வெளியே வந்தார். அங்கே பயங்கர கூட்டம். பத்திரிகை கொண்டு வந்த வாலிபர் கண்ணாயிரத்தை நோக்கி ஓடிவந்தார். அண்ணே உள்ள அடி கிடி இல்லையே என்று கேட்டார். கண்ணாயிரம் அது எல்லாம் ஒன்றும் இல்லை என்றார். அந்த இளைஞர் கேட்பதாக இல்லை. உள்ளே அம்மா, அப்பான்னு சத்தம் கேட்டிச்ச என்று சந்தேகத்தை கிளப்பினான். கண்ணாயிரம் அவனிடம், டேய் கோவிலில் நகை திருடிய ஒருவனை போலீஸ்காரர் அடித்தார். அவன் போட்ட சத்தம்தான் வெளியே கேட்டது. என்றார். அந்த வாலிபருக்கு திருப்திஏற்படவில்லை. சட்டையை கழற்றுங்கள் பார்ப்போம்என்றான். கண்ணாயிரம் சட்டையை கழற்றி காட்டினார். அந்த வாலிபர் பார்த்துவிட்டு சேதாரம்ஒண்ணும் இல்லை எல்லாம் நல்லா இருக்கு என்றான். அடுத்த வினாடி, போலீஸ்நிலையத்துக்கு சென்றுவிட்டு சேதாரம் இல்லாமல் திரும்பிய தியாகி கண்ணாயிரம் வாழ்க என்று கோஷமிட்டான். கண்ணாயிரம் அவன் வாயை பயத்தினால் பொத்தினார். ஆனால் மற்றவர்கள் வாழ்க என்று கோஷமிட்டார்கள். கண்ணாயிரம் ஆகா.. எமகண்டம் ஸ்டாட்ஆயிட்டு.. தம்பி சைக்கிளில் கொண்டுபோய் விட்டுறுப்பாஎன்றார். அந்த வாலிபர் கண்ணாயிரத்தை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார். மற்றவர்கள் பின் தொடர்ந்து வந்தனர்.
-வே. தபசுக்குமார்.