பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
1 min readTerrorist shot dead in encounter with security forces
25.6.2021
காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.
பயங்கரவாதி
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டம் கஞ்ச்புரா பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர்.
சுட்டுக்கொலை
பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.
மோதல் நடைபெற்ற பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த பயங்கரவாதிகளை தேடும் பணிகளில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.