கணவரால் கைவிடப்பட்டு, ஐஸ்கிரீம் விற்ற பெண் போலீஸ் அதிகாரியாக உயர்ந்தார்
1 min readChased by her husband, the woman who sold the ice cream rose to become a police officer
28.6.2021
கேரளாவில் காதல் கணவரால் கைவிடப்பட்டதால், குழந்தையுடன் சாலையில் ஐஸ்கிரீம் விற்று பிழைத்து வந்த பெண், அதே ஊரில் போலீஸ் அதிகாரியாக பணியில் அமர்ந்தார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
கணவரால் கைவிடப்பட்ட பெண்
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் காஞ்சிராம்குளத்தை பூர்வீகமாகக் கொண்ட பெண் எஸ்.பி.ஆனி சிவா( வயது 31). இவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது ஒருவரை காதலித்தார். பெற்றோர் எதிர்ப்பையும் மீறி அந்த வாலிபரை திருமணம் செய்து கொண்டார்.
இரண்டு வருடம் காதல் கணவருடன் இல்லற வாழ்க்கை நடத்தினார் ஆனி. பின்னர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் 8 மாதக் கைக்குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட ஆனியை பெற்றோர் வீட்டிலும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இதனால் அவர் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்ட அவர் கடைசியாக தனது பாட்டியின் வீட்டில் தஞ்சம் புகுந்தார்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்
ஆனாலும், வைராக்கியத்துடன் இருந்த ஆனி மனதிடத்துடன் வர்கலாவில் டெலிவரி செய்வது, எலுமிச்சைப் பழம் விற்பது திருவிழாக்களில் ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் விற்பனை செய்வது என கிடைத்த வேலைகளை செய்துவந்தார். ஆனாலும் தனது கல்லூரி படிப்பை மட்டும் விடாமல் தொடர்ந்து படித்து வந்தார்.
தற்போது போலீஸ் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, சாலையில் ஐஸ்கிரீம் விற்பனை செய்த ஊரிலே போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக ஆனி பணிக்குச் சேர்ந்துள்ளார்.
அவர் தனது பேஸ்புக்கில் “பத்து ஆண்டுகளுக்கு முன்பு, வர்கலா சிவகிரி யாத்திரைக்கு வரும் மக்களுக்கு எலுமிச்சை மற்றும் ஐஸ்கிரீம் விற்றேன். இன்று, நான்போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக அதே இடத்திற்குத் திரும்புகிறேன்” என கூறி உள்ளார்.
கேரள காவல்துறையின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் கணக்கு அவரது கதையை ஒரு குறிப்புடன் பகிர்ந்து கொண்டது: “இது ஒரு போராட்டத்தின் கதை. சவால்களுக்கு உறுதியுடன் நின்ற எங்கள் சகாவின் வாழ்க்கை கதை” என குறிப்பிட்டு உள்ளது.
பாராட்டு
ஆனியின் கதை கேரளா முழுவதும் அவருக்கு அதிக ஆதரவாளர்களை பெற்று தந்துள்ளது. நடிகர் உன்னி முகுந்தன் பாராட்டி பதிவிட்டுள்ளார், அதில், “பெண்கள் அதிகாரம் என்பது நிஜமாகிறது, பெரிய கனவுகள் மூலமாக உண்மையான போராளி அனைவருக்கும் உத்வேகமாக இருப்பார்” என கூறி உள்ளார்.
கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தனது பேஸ்புக்கில் “அவரது கணவரும் பெற்றோரும் அவளை வீதியில் கைவிட்டபோதும், அவர் வாழ்க்கையின் சவால்களுக்கு எதிராக போராடி பட்டதாரி மற்றும் முதுகலை பட்டங்களை பெற்றார், அதே நேரத்தில் ஒரு குழந்தையை வளர்த்து வந்துள்ளார். ஆனி உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு ஒரு எடுத்துகாட்டாக இருக்கிறார்” என கூறி உள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தனது பதிவில், ” ஆனயின் வாழ்க்கை கதை மிகவும் உற்சாகமூட்டுகிறது. அவர் வாழ்க்கையின் வெற்றி மற்றும் மன வலிமையின் எடுத்துக்காட்டு” என கூறினார்.