உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக புஷ்கர் சிங் தேர்வு
1 min read
Pushkar Singh elected new Chief Minister of Uttarakhand
3.7.2021
உத்தரகண்ட் மாநில முதல்வராக, புஷ்கர் சிங் தாமி, தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
உத்தரகாண்ட்
உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த 2017ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பா.ஜ., வெற்றி பெற்று, முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் பதவியேற்றார். உட்கட்சி பூசல் காரணமாக கடந்த மார்ச் மாதம் அவர்தன் பதவியை ராஜினாமா செய்தார்.
அவருக்குப்பதில் லோக்சபா எம்.பி.யான தீரத் சிங் ராவத், முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக இல்லாத தீரத் சிங் ராவத், செப்டம்பர் மாதத்திற்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக வேண்டிய சூழல் இருந்தது.
விலகல்
கொரோனா பரவல் காரணமாக இடைத்தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையம் தற்போது தயாராக இல்லை. எனவே, தீரத் சிங் ராவத் செப்டம்பருக்குள் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்படுவதில் சிக்கல் எழுந்தது. உத்தரகண்ட் மாநில பாரதீய ஜனதாவிலும் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அடுத்தாண்டு, உத்தரகண்டில் சட்டசபை தேர்தலும் நடக்கவுள்ளது.
கடந்த மூன்று நாட்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த ராவத், பாரதீய ஜனதா தலைவர்களை சந்தித்து பேசி வந்தார். தொடர்ச்சியாக, முதல்வர் பதவியில் இருந்து விலகினார்.
புதிய முதல்வர் தேர்வு
இந்த நிலையில், புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் டேராடூனில் நடந்தது. இந்த கூட்டத்தில், கதிமா தொகுதி எம்.எல்.ஏ.,வான புஷ்கர் சிங் தாமி(வயது 45), புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். கதிமா தொகுதியில் இருந்து தொடர்ச்சியாக இரு முறை தேர்வு செய்யப்பட்ட புஷ்கர் சிங், பாரதீய ஜனதாவின் இளைஞர் அணி தலைவராகவும் இருந்துள்ளார். கடந்த 4 மாதங்களில், உத்தரகண்ட் மாநிலத்தில் 3வது முதல்வர் பதவியேற்க உள்ளார்.