ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு
1 min read
Chief Minister MK Stalin’s opposition to the draft editing bill
6/7/2021
ஒன்றிய அரசு கொண்டு வர இருக்கும் ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவர் ஒன்றிய அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “திரைத்துறையின் படைப்புச் சிந்தனையை முடக்குவதாகும்” என்று குறிப்பிட்டு உள்ளார்.
ஒளிப்பதிவு திருத்த மசோதா
ஒன்றிய அரசு ஒளிப்பதிவு திருத்த மசோதாவை கொண்டு வர உள்ளது. இதற்கான கருத்துக்களை பொதுமக்கள் தெரிவிக்க ஜூலை 2-ந் தேதி வரை அவகாசம் தெரிவித்தது.
இந்த ஒளிப்பதிவு சட்டத்தில் ஒன்றிய அரசு 4 முக்கிய திருத்தங்களை கொண்டு வர உள்ளது. அதில் ஒன்று ஒரு திரைப்படம் தணிக்கை செய்து வெளியான பின்னர் அதை மறு தணிக்கைக்கு அரசு பரிந்துரைக்கலாம் என்பது. அதேபோல் படத்தை யாரெல்லாம் பார்க்கலாம் என்பதை வயது வாரியாக 4 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளது. மேலும் திரைப்படத்தின் ஒளி, ஒலிப்பதிவை திருடுவோருக்கு தண்டனை கொடுக்கவும் இந்த சட்டத்தில் வகை செய்யப்பட்டு உள்ளது.
இதற்கு திரை உலகத்தைச் சேர்ந்த கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி உள்பட சிலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
மு.க.ஸ்டாலின் கடிதம்
இந்த நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
கருத்து சுதந்திரம்
ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதா 2021 திரைத்துறைக்கு மட்டுமல்லாமல் கருத்துச் சுதந்திரத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள சமூகத்தின் பல தரப்பினரிடமும் தீவிர அச்சத்தை உருவாக்கியுள்ளது. இந்த மசோதா, 20 ஆண்டுகளுக்கு முன் உச்ச நீதிமன்றத்தால் மத்திய அரசிடமிருந்து நீக்கப்பட்ட திருத்த அதிகாரங்களை மீண்டும் தக்கவைப்பதன் மூலம், அவற்றைக் கட்டுப்படுத்துகிறது.
மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (சி.பி.எப்.சி) பிரிவு 5(ஏ)-ல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அளவுகோல்களையும் பூர்த்தி செய்யும் திரைப்படங்களுக்குச் சான்றளிக்கிறது. சில குறிப்பிட்ட காரணங்களின் அடிப்படையில், சான்றளிக்காமல் அத்திரைப்படத்தை நிராகரிக்கவும் இச்சட்டம் வழிவகுக்கிறது. இந்த சட்டத்தின் பிரிவு 5(பி)-ன் கீழ், திரைப்பட உருவாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் உள்ளன. எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு, ஒரு படைப்பைக் கட்டுப்படுத்துவதற்கு சட்டப்பிரிவுகளைச் சேர்ப்பது 21-ம் நூற்றாண்டில் அதிகப்படியானதாகத் தோன்றுகிறது.
மாநில கட்டுப்பாட்டில்..
பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி, ஒரு திரைப்படம் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தால் பொதுமக்கள் பார்வைக்கு சான்றளிக்கப்பட்டால், அது முதலில் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் வருகிறது. ஏனெனில், சட்டம் மற்றும் ஒழுங்கு மாநிலக் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், இப்போது, ஒன்றிய அரசு, முன்மொழிந்துள்ள மசோதாவின் மூலம் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக, மாநில அரசு மற்றும் ஒன்றிய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின் அதிகாரங்களை ஒன்றிய அரசு மீற முயல்கிறது.
சிபிஎப்சி சான்றளித்த பின்னர், மறுசீரமைப்பு அதிகாரத்தை மீட்டெடுக்கும் வரைவு திருத்தம், திரைத்துறையின் படைப்புச் சிந்தனையை முடக்குவதாகும். மேலும், எப்படித் திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்பதில் கட்டுப்பாடுகளை விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைக்கு எதிரானதாகும்.
நடைமுறை சிக்கல்
கருத்துச் சுதந்திர உரிமையைத் திருப்பி எடுப்பது ஜனநாயகத்தை பலவீனமடையச் செய்யும். மூன்று பிரிவுகளின் கீழ் சான்றிதழின் வயது வாரியாகத் தொகுத்தல் மற்றும் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. சி.பி.எப்.சி சான்றளித்த பின்னர் ஒரு திரைப்படத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்வது, திரைப்பட உருவாக்கத்தை மிகவும் ஆபத்தான மற்றும் நிச்சயமற்ற ஒரு தொழிலாக மாற்றிவிடும்.
ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதா 2021-ஐ திரும்பப் பெற வேண்டும் எனவும், சிபிஎப்சி சுதந்திரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளார்.