பிரதமரின் எப்.எம்.இ. திட்டம் மூலம் சிறு,குறு தொழிலை விரிவுபடுத்த 2 லட்சம் மானிய கடன்
1 min readrime Minister’s FME 2 lakh grant loan to expand small and micro enterprises through the scheme
31/7/2021-
கிராமங்களில் உணவு சார்ந்த சிறு, குறுந்தொழிலை விரிவுபடுத்த பிரதமரின் எப்.எம்.இ. திட்டம் மூலம் மானியத்துடன் ரூ.2லட்சம் கடன் வழங்கப்படுகிறது.
உணவு சார்ந்த தொழில்
மத்திய அரசின் உணவுசார்ந்த குறுந்தொழில்களுக்கான (பி.எம். எப்.எம்.இ.,) திட்டம் சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. ஜூன் 2020ல் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் பிரதமரின் ஆத்மநிர்பார் திட்டம் ஒரு பகுதியாக உள்ளது. புதிய தொழில்நுட்பத்தை கொண்டு வரும் முயற்சியாகவும், சந்தை விற்பனையை மேம்படுத்துவதற்காகவும் இத்திட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் சிறு, குறு நிறுவனங்கள் தங்கள் தொழில் வளர்ச்சிக்கான 35 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை பெறலாம்.
மானியத்துடன் கடன்
புதிதாக தொழில் தொடங்குபவர்கள், தொழிலை விரிவுபடுத்துபவர்கள் திட்டமதிப்பில் 10 சதவீத சுயமுதலீடு செய்ய வேண்டும். குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள சிறு சிறு உணவு, பேக்கரி, பிஸ்கட், தின்பண்டங்கள் சார்ந்த தொழில் நிறுவனங்கள் இதன் மூலம் முன்னேறலாம். கிராமப்புற தொழில் முனைவோர் தயாரிக்கும் உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு தங்களது சந்தையை விரிவுபடுத்தும் தொழில்நுட்பம் மற்றும் வணிக ஆதரவு வழங்கப்படுகிறது.
அதிகபட்சமாக 2 லட்சம் குறு நிறுவனங்களுக்கு மானிய கடன் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் சிறப்பம்சமாக மாவட்டத்திற்கு ஒரு தயாரிப்பு என்ற வகையில் உற்பத்தி விளைபொருட்கள் அடையாளம் காணப்படுகின்றன.
மாவட்டத்தில் கிடைக்கும் மூலப்பொருட்கள் அங்கு ஏற்கனவே உள்ள தொழில் கூட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு விளைபொருள் பட்டியலிடப்பட்டுஉள்ளது. மா, உருளைக்கிழங்கு, லிச்சி, தக்காளி, மரவள்ளிக்கிழங்கு, அப்பளம், ஊறுகாய், தினை சார்ந்த பொருட்கள், மீன்வளம், கோழி, இறைச்சி மற்றும் விலங்குகளின் தீவனம் என உணவு சார்ந்த தொழில்களுக்கு மானியகடன் பெற முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
பொதுவசதி மையம்
மாவட்ட அளவில் இதுபோன்ற தொழில்கள் இருந்தாலோ புதிதாக தொடங்கினாலோ அதற்குரிய பிராண்டிங், மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைக்கும் வழிகாட்டப்படுகிறது. மேலும் ஒரே தொழில் செய்பவர்களுக்கான பொது வசதி மையத்தை அமைத்துத் தருகிறது.இதுகுறித்து கூடுதல் தகவல்களுக்கு அந்தந்த மாவட்ட தொழில் மைய அலுவலகம் அல்லது வேளாண் வணிக அலுவலகத்தை அணுகலாம்.