இந்தியாவில் மேலும் 41,649 பேருக்கு கொரோனா; 593 பேர் பலி
1 min readCorona for another 41,649 in India; 593 killed
31/7/2021
இந்தியாவில் இன்று காலை கொரோனா பாதிப்பு சற்று குறைந்தது. ஒரே நாளில் 41,649 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.
கொரோனா 2-வது அலை
நாட்டில் கொரோனா 2வது அலையின் தீவிர பாதிப்புகள் குறைந்து உள்ளன. இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 41,649 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. நேற்று காலை 44,230 பேருக்கும், வியாழக்கிழமை காலை 43,509 பேருக்கும் கொரோனா பதிவு ஆகி இருந்தது. இதனால் கடந்த 2 நாட்களை விட பாதிப்பு எண்ணிக்கை குறைந்து உள்ளது.
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 37,291 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று காலை வரை ஒரு நாளில் 42,360 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 16 லட்சத்து 13 ஆயிரத்து 993 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 7 லட்சத்து 81 ஆயிரத்து 263 ஆக உயர்ந்து உள்ளது.
கொரோனா பாதிப்புகளுக்கு 4 லட்சத்து 8 ஆயிரத்து 920 பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
593 பேர் பலி
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 593 பேர் (நேற்று 555) உயிரிழந்து உள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,23,810 ஆக உயர்ந்து உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. இதனால், மொத்தம் 46 கோடியே 15 லட்சத்து 18 ஆயிரத்து 479 பேருக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.