டெல்லி ஜந்தர் மந்தருக்கு எதிர்க்கட்சியினர் பஸ்சில் சென்று விவசாயிகளுடன் போராட்டம்
1 min read
Opposition bus to Delhi Jantar Mantar and protest with farmers
6.8.2021-
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சியினர் ஜந்தர் மந்தருக்கு சென்று விவசாயிகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெளிநடப்பு
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியதும் எதிர்க்கட்சியினர் பெகசஸ் உளவு மென்பொருள் பிரச்சனையை எழுப்பியதால் அமளி ஏற்பட்டது. இதையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில் மக்களவையில் வரி விதிப்பு சட்டங்கள் திருத்த முன்வரைவு நிறைவேற்றப்பட்டது.
அதன்பின் இரு அவைகளும் திங்கட்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டன. வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராகுல்காந்தி தலைமையில் பேருந்தில் ஏறி ஜந்தர் மந்தருக்கு சென்றனர். அங்கு விவசாயிகளுடன் சேர்ந்துகொண்டு புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி முழக்கமிட்டனர்.
ஆதரவு
ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, ராஷ்டீரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் விவசாயிகளை சந்தித்து ஆதரவு வழங்கினர்.
விவசாயிகளை, மல்லிகார்ஜூன கார்கே, அதிரஞ்சன் சவுத்ரி, டி.கே.எஸ். இளங்கோவன், திருச்சி சிவா, மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, விஜய் வசந்த் உள்ளிட்டோரும் சந்தித்தனர்.
அவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாயிகளை காப்பாற்று, இந்தியாவை காப்பாற்று என்று வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஏந்தியபடி கோஷங்களையும் எழுப்பினர்.