“ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு
1 min read“Chennai High Court refuses to ban government from raising retirement age to 60
29.9.2021
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்குத் தடை விதிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஓய்வு வயது
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி தமிழக அரசு, கடந்த பிப்ரவரி 25-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும், அதற்குத் தடை விதிக்கக் கோரியும் திருச்சி, துறையூரைச் சேர்ந்த பாலமுரளிதரன் என்பவர், சென்னை உயர் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி அதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ள நிலையில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரித்துள்ளதால், அரசு வேலை தேடுவோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டது.
தள்ளுபடி
தமிழக அரசுத் தரப்பில், இந்த அரசாணையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை ஏற்கெனவே ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, முழுமையான விவரங்கள் இல்லாமல் மனுத்தாக்கல் செய்திருப்பதாகத் தெரிவித்த நீதிபதிகள், அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது எனக்கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
அபராதம்
மேலும், மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள், 2 ஆண்டுகளுக்கு நீதிமன்ற அனுமதி இல்லாமல் பொதுநல வழக்குத் தொடர மனுதாரருக்குத் தடை விதித்து உத்தரவிட்டனர்.