May 7, 2024

Seithi Saral

Tamil News Channel

லகிம்பூர் வன்முறை: மத்திய மந்திரியின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா விசாரணைக்கு ஆஜர்

1 min read

Lakhimpur violence: Union minister’s son Ashish Mishra to appear in court

9.10.2021
லகிம்பூர் வன்முறையில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இன்று போலீசார் முன் விசாரணைக்காக ஆஜரானார்.

வன்முறை

உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் கடந்த 3-ம் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பாஜகவினர் சென்ற கார் மோதியது. இதில், சில விவசாயிகள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் மொத்தம் 4 விவசாயிகள், ஒரு பத்திரிக்கையாளர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.

விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வன்முறை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த வன்முறை தொடர்பாக ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலைவழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்

இதற்கிடையில், கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்ட போதும் ஆஷிஷ் மிஸ்ராவை போலீசார் கைது செய்யாமல் இருந்து வந்தனர். ஆனால், லகிம்பூர் வன்முறை தொடர்பாக நேற்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

அப்போது, கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்படாதது ஏன்? என்று உத்தரபிரதேச அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது. அதற்கு பதிலளித்த உத்தரபிரதேச அரசு தரப்பு வழக்கறிஞர், ஆஷிஷ் மிஸ்ரா நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், முதல் சம்மனுக்கு இன்னும் பதில் வராததால், இரண்டாவது சம்மன் அனுப்ப உள்ளதாகவும், இதற்கும் உரிய பதில் வரவில்லை என்றால் கைது நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம் என்றும் கூறினார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த வழக்கில் ஆஷிஷ் மிஸ்ராவை சனிக்கிழமைக்குள் (இன்று) கைது செய்ய வேண்டும் என்று உத்தரபிரதேச போலீசாருக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. லகிம்பூர் வன்முறை வழக்கை உத்தரபிரதேச அரசு கையாளும் விதம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு கடுமையான அதிருப்தியை தெரிவித்தது.

ஆஜர்

இதனை தொடர்ந்து, தனது மகன் ஆஷிஷ் மிஸ்ரா சனிக்கிழமை (இன்று) விசாரணைக்கு ஆஜராவார் என்று மத்திய மந்திரி அஜய் மிஸ்ரா நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், லகிம்பூர் வன்முறையில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள மத்திய மந்திரியின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இன்று விசாரணைக்காக போலீசார் முன் ஆஜராகியுள்ளார். லகிம்பூரில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு இன்று காலை வந்த ஆஷிஷ் மிஸ்ரா விசாரணைக்காக ஆஜரானார்.

விசாரணைக்காக ஆஜராகியுள்ள ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்கு ஆஜராகியுள்ள ஆஷிஷ் மிஸ்ராவிடம் லகிம்பூர் வன்முறை தொடர்பாக போலீசார் நடத்த உள்ள விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.