கொலை வழக்கு: தி.மு.க. எம்.பி. தலைமறைவு
1 min readMurder case: DMK MP Disappearance
9.10.2021
பண்ருட்டி முந்திரி தொழிற்சாலை தொழிலாளி மரணம் தொடர்பாக தி.மு.க. எம்.பி. ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்குப்பதியப்பட்டுள்ளது. 5 பேர் கைதான நிலையில், எம்.பி.யை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மர்மச்சாவு
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராசு(வயது 60). பனிக்குப்பத்தில் கடலுார் தி.மு.க. எம்.பி. ரமேஷின், முந்திரி தொழிற்சாலையில் பணிபுரிந்தார். கடந்த மாதம (செப்டம்பர்) 19-ந் தேதி மர்மமான முறையில் இறந்தார்.
சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி. கோமதி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கோவிந்தராசு கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து இவ்வழக்கு கொலை வழக்காக நேற்று முன்தினம் மாற்றப்பட்டது.
கைது
இதுதொடர்பாக, ரமேஷ் எம்.பி., அவரது உதவியாளர் பண்ருட்டியைச் சேர்ந்த நடராஜ், சக தொழிலாளிகள் அல்லா பிச்சை, சுந்தர், வினோத், கந்தவேல் ஆகியோர் மீது சி.பி.சி.ஐ.டி., போலீசார் 302(கொலை), 201 (தடயம் மறைப்பது), 149 (சதிதிட்டம்), 120b (கூட்டு சதிதிட்டம்) 147- (-5 பேருக்கு மேல் கூட்டாக சேர்நது தாக்குதல்) 148 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது ரமேஷ் எம்.பி.,யின் உதவியாளர் நடராஜ் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நள்ளிரவு 12:00 மணிக்கு பிறகும் விசாரணை நீடித்தது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி., கோமதி கூறும் போது ரமேஷ் எம்.பி., மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவரை தேடி வருவதாக தெரிவித்தார்.