சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை
1 min readTeacher jailed for 10 years for sexually harassing girl
9.10.2021
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை
திருபுவனை அருகே உள்ள கலிதீர்த்தாள்குப்பம் வாட்டர் டேங்க் பகுதியில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் விழுப்புரத்தை சேர்ந்த ஏர்லின் பெரோரா (வயது 54) ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு பள்ளியில் படித்து வந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அந்த சிறுமி மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டாள். இதனை பார்த்த பெற்றோர், சிறுமியிடம் விசாரித்தபோது ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த விவரம் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், திருபுவனை போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் ஏர்லின் பெரோராவை கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
10 ஆண்டு சிறை
இந்த வழக்கில் இருந்து புதுவை கோர்ட்டு ஏர்லின் பெரோராவை விடுதலை செய்தது. இதை எதிர்த்து சிறுமியின் பெற்றோர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை முடிவடைந்ததைதொடர்ந்து நேற்று முன்தினம் நீதிபதி வேல்முருகன் தீர்ப்பு கூறினார். குற்றம் சாட்டப்பட்ட ஏர்லின் பெரோராவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
சிறையில் அடைப்பு
இதைத் தொடர்ந்து திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேல் மற்றும் போலீசார் ஏர்லின் பெரோராவை மீண்டும் கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.