ராகுல் காந்தி வெளிநாடு பயணம்; எங்கு சென்றார் என்பது தெரியவில்லை
1 min read
Rahul Gandhi travels abroad; It is not known where he went
17.11.2021
ராகுல்காந்தி வெளிநாடு சென்றுள்ளார். அவர் நாடாளுமன்ற கூட்டத்திற்கு முன்பாக திரும்புவார் என்று கூறப்படுகிறது.
ராகுல் வெளிநாடு பயணம்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி திடீரென வெளிநாடு சென்றுள்ளார். இதுபற்றி எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. தனிப்பட்ட பயணமாக ரகசியமாக அவர் சென்று இருக்கிறார். எந்த நாட்டில் அவர் இருக்கிறார் என்ற விவரமும் வெளியிடப்படவில்லை.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக அவர் இந்தியா திரும்புவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
ராஜஸ்தான் அரசு
ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் ஏற்பட்ட மோதலை அடுத்து ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது. அதன் பிறகு ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் மேற்கொண்ட சமரச முயற்சியின் காரணமாக இருவரும் ஒன்றிணைந்தனர்.
சச்சின் பைலட் தனது ஆதரவாளர்கள் பலரை மந்திரி சபையில் இடம் பெற செய்ய முயற்சி மேற்கொண்டார். எனவே மந்திரி சபையை விஸ்தரிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
அசோக் கெலாட், சச்சின் பைலட் இருவருமே சோனியா காந்தியை சந்தித்து பேசினார்கள். அப்போது யார், யாருக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்பது பற்றி உறுதி செய்தனர்.
தாமதம்
ஆனால் ராகுல் காந்தியினுடைய ஒப்புதல் வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ராகுல் காந்தி தற்போது வெளிநாட்டில் இருப்பதால் அந்த பணி தாமதமாகி உள்ளது. அவர் திரும்பியதும் ஒப்புதலுக்கு பிறகு ராஜஸ்தான் மாநில மந்திரி சபை விஸ்தரிக்கப்பட இருக்கிறது.
இதேபோல அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாப் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. ஆனால் அங்கும் கட்சியில் கோஷ்டி மோதல் உருவாகி உள்ளது.
இந்த பிரச்சினைக்கும் தீர்வு காணப்படாமல் இருக்கிறது. ராகுல் காந்தி வந்த பிறகுதான் அது சம்பந்தமாகவும் இறுதி முடிவு எடுக்க இருக்கிறார்கள்.