கண்ணாயிரம் ஆடிய சிலம்பாட்டம்/ நகைச்சுவை கதை
1 min read
Silmpattam by Kannayiram / Story by Thabasukumar
27.11.2021
கண்ணாயிரம் பஞ்சாயத்து முடிந்து வீட்டுக்குள் சென்றபோது வெள்ளை நிறசேவக்கோழியும் வீட்டுக்குள் ஓடியது. கண்ணாயிரம் அதை வெளியே விரட்டமுயன்ற போது அது சமையல் அறைக்குள் புகுந்தது. பூங்கொடி கம்பால் தாக்கியபோது பறந்து அலமாரியில் உள்ள பாத்திரங்களை கீழே உருட்டிவிட்டது. அவர் அய்யோ பாத்திரம் போச்சு, பாத்திரம் போச்சு என்று கத்தினார். கண்ணாயிரம் அந்த சேவலை பார்த்து, ஏய் கீழே இறங்கு, அடிச்சுருவேன்.. ம்.. இறங்கு.. என்று மிரட்டிப்பார்த்தார். ம்.. அது அசையவில்லை. பூங்கொடி ஏங்க.. நீங்க அங்கே போங்க… நான் பாத்துக்கிறேன்.. என்றபடி கம்பால் சேவலை ஓங்கி அடித்தார். அது அங்கிருந்த ஒருடப்பாவை உருட்டிவிட்டது. அது கீழே விழுந்து உருண்டோடியது. அதிலிருந்த கருவாடு கள் வீடெங்கும் சிதறியது.
ஆ.. என் கருவாடு… ம்.. என்று அழுதவாறு பூங்கொடி அவைகளை பொறுக்கி டப்பாக்குள் போட்டார். கண்ணாயிரம் மெல்ல எட்டிப்பார்த்து, பூங்கொடி கருவாடா..வாடை அடிக்கு.. எப்போ வாங்கின.. என்று கேட்டார். பூங்கொடி.. ஏங்க. அது என் அப்பா வாங்கிட்டு வந்தது. நல்லா குழம்புவைச்சு சாப்பிட சொன்னார் என்றார்.
கண்ணாயிரம்.. அப்படியா.. இன்னைக்கு நைட்டு.. கருவாட்டு குழம்புவைச்சு தருவியா என்று கேட்டார். ம்.. அது ஒண்ணுதான் குறைச்சல்.. முதலில் கோழியை விரட்டுற வேலையைபாருங்க.. என்றார்.
அப்போது வீட்டில் திறந்துகிடக்கும் வாசல்வழியாக பூனை ஒன்று ஓடிவந்தது. கருவாட்டை தேடிவந்த பூனையை பார்த்ததும். பூங்கொடி.. ஏங்க பூனையை ஏன் வீட்டுக்குள்விட்டீங்க.. எல்லாம் போச்சு.. என்றவாறு பூனையைவிரட்டினார். அது பூங்கொடியை முறைத்து பார்த்தபடி.. மியாவ்.. மியாவ் என்றுகத்தியது. கருவாட்டை குறிவைத்து பாய்ந்தது.
பூங்கொடி கையிலிருந்த கம்பால்…ஓடு.ஓடு என்று விரட்டினார். அது போகவில்லை. பூங்கொடியையே முறைத்துபார்த்தபடி.. ஆக்ரோசமாக கத்தியது.கண்ணாயிரம்..என்ன இது ஒருபக்கம் சேவல். ஒருபக்கம் பூனை.. எப்படிசமாளிப்பது.. பயமா இருக்கே.. எப்படிவிரட்டுவது.. என்று யோசித்தார். பூங்கொடி… பூனைக்கு ஒருகருவாடு.. கொடு.. அதை எடுத்துட்டு அது ஓடிடும். என்று சொன்னார்.
பூங்கொடி.. ஆ.. அது எங்க அப்பாவாங்கிகொடுத்தது.. அதை நான் கொடுக்க மாட்டேன்.. போங்க.. இந்த பூனையை கம்பால் ஒரு போடு போட்டா..அது ஓடிடபோகுது.. போங்க.. அங்கே.. என்று அதட்டினார். கையிலிருந்த கம்பால் அவர் பூனையை ஓங்கி அடிக்க..அது பூங்கொடி மீது பாய்ந்து அவர் கையைகடித்தது. பூங்கொடி.. ஆ.. பூனை கையைகடிச்சிட்டு.. பூனை கையைகடிச்சிட்டு என்று கம்பை கீழே போட்டுவிட்டு அலறினார். அப்போது.. பூனை ஒருகருவாட்டை வாயில் கவ்விக்கொண்டு குடு, குடு என்று வெளியே ஓடியது.. கண்ணாயிரம்.. ஆ.. என்று வாயைபிளந்தபடி அதையே பார்த்து கொண்டிருந்தார். பூங்கொடி.. ஏங்க.. கருவாட்டை புடுங்குங்க.. கருவாட்டைபுடுங்குங்க.. என்று கத்தினார். கண்ணாயிரம்.. விடு.. விடு.. அதை பிடுங்கினா…என்ன கடிச்சிரும்.. ஒருகருவாடு தானே..போட்டும்..என்றார்.
பூங்கொடி.. ஓ.. என்று அழுதார். கண்ணாயிரம்.. பூங்கொடி.. அழாதே..இதுக்கெல்லாம் காரணம்.. உங்க அப்பாதான்.. அவர் கருவாடுவாங்கிட்டுவராம.. இருந்திருந்தா.. இந்த பிரச்சினை வந்திருக்குமா.. என்று கேட்டார். பூங்கொடி.. எங்க அப்பாவை ஏன் குறைசொல்லுறீய.. நீங்க. இந்த கோழியை உள்ளேவிட்டதுதான் காரணம். அது கருவாட்டுடப்பாவை உருட்டிவிடாம இருந்திருந்தா.. பூனைவந்திருக்குமா. ஒருகருவாடு போச்சு.. என் கையில கடிச்சுபுட்டு.. நான் என்ன செய்வேன்.. என்று கண்ணீர் விட்டார். சேவல் கோழி.. அலமாரியில் இருந்தபடி கீழே நடக்கும் கூத்தை பார்த்துகொண்டிருந்தது. கண்ணாயிரம் அந்த சேவலை கண்களை உருட்டிப்பார்த்தார். இந்த சேவல் இன்னும் என்ன ரகளைபண்ணப்போகுதோ என்று நினைத்தார்.
பூங்கொடி.. அவரைப்பார்த்து ஏங்க.. இந்த சேவல் யார் வீட்டு சேவல். இங்கே வந்திருக்கு என்று கேட்டார். கண்ணாயிரம் அவசரப்பட்டு இது நம்ம கோழி தான் என்றார். என்ன சொல்லுறீங்க..நம்மவீட்டுலதான் கோழியே கிடையாதே. என்றார் பூங்கொடி. கண்ணாயிரம் ஆமா.. ஆமா.. கிடையாதுல்ல.பிறகு எப்படி இங்கே வந்துச்சு என்று சமாளித்தார்
. மோகினி பூஜைக்கு கொடுத்த வெள்ளசேவல் இப்போவீடுதேடிவந்திருக்கு என்கிற விசியம் பூங்கொடிக்கு தெரியல.. நல்லவேளை தப்பிச்சோம் என்று கண்ணாயிரம் நினைத்தார்.
அவர் யோசனையில் இருப்பதை பார்த்த பூங்கொடி.. ஏங்க.. அதை வெளியேவிரட்டுங்க.. என்று கத்தினார். கண்ணாயிரம் மெல்ல, பூங்கொடி ஒருகருவாடு கொடு..அதைகாட்டினா சேவல் கீழே இறங்கிவரும்.அப்படியே அதை வெளியேவிரட்டிவிடலாம் என்றார். பூங்கொடி.. உடனே ம்.. கருவாடெல்லாம் கிடையாது. நீங்க உங்க சாமர்த்தியத்தில் அதைவிரட்டுங்க..என்று சொன்னார். கண்ணாயிரம்.. யோசித்தார். பின்னர்..பூங்கொடி கையிலிருந்த கம்பை வாங்கி சிலம்பாட்டம் போல் சுற்றினார். அப்போது கையிலிருந்த கம்பு நழுவி அலமாரியில் இருந்த ஒருபாத்திரம் மீது பட்டு அது கீழே உருண்டது. என்னங்க.. உங்ககிட்ட போயி அந்த கம்பை கொடுத்தது தப்பாபோச்சு. கொடுங்க கம்பை என்று பூங்கொடி வாங்கினார். கண்ணாயிரம் கம்பை பூங்கொடியிடம் கொடுத்து விட்டு அப்பாவியாக பார்த்தார். அப்போது செல்போன் ஒலித்தது. செல்போன் இருந்த அறைக்குள் பூங்கொடியும் கண்ணாயிரமும் ஓடினார்கள்
(தொடரும்)
-வே. தபசுக்குமார். புதுவை.