கோடநாடு வழக்கு: சசிகலா உறவினர் விவேக்கிடம் விசாரணை
1 min read
Kodanad case: Inquiry into Sasikala’s relative Vivek
22.12.2021
கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவின் அண்ணன் ஜெயராமன் – இளவரசி மகன் விவேக்கிடம், கோவையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் நீடித்தது.
கோடநாடு கொலை
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கோடநாட்டில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி காவலாளி ஓம் பகதூர் கொள்ளையரால் கொலை செய்யப்பட்டார். ஆவணங்கள், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கு ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஸ் ராவத், துணை சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையில், விசாரணை அதிகாரியாக வேல்முருகனும், ஏ.டி.எஸ்.பி., கிருஷ்ணமூர்த்தியும் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, ஜெயா டிவி நிர்வாக இயக்குநர்களில் ஒருவரும், சசிகலாவின் அண்ணன் மகனுமான விவேக் ஜெயராமனிடம், கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் விசாரணை நடந்தது. சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக இந்த விசாரணை நடந்தது.