காஷ்மீரில் கூட்ட நெரிசலில் 12 பக்தர்கள் பலி
1 min read12 pilgrims killed in Kashmir massacre
1.1.2022
காஷ்மீரில் மாதா வைஷ்ணவி தேவி பவனில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பக்தர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மாதா வைஷ்ணவிதேவி கோவில்
ஜம்மு மற்றும் காஷ்மீரின் கத்ரா நகரில் மாதா வைஷ்ணவி தேவி கோவில் உள்ளது. ஆண்டுதோறும் பக்தர்கள் அதிக அளவில் இந்த கோவிலுக்கு யாத்திரையாக வந்து தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். ஆங்கில புது வருட பிறப்பினை முன்னிட்டு மாதா வைஷ்ணவி தேவி பவன் பகுதியருகே கோவில் பக்தர்கள் அதிக அளவில் கூடியுள்ளனர்.
அவர்களில் ஒரு பிரிவினரிடையே அதிகாலை 2.45 மணியளவில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில், தகராறு முற்றி ஒருவரை ஒருவர் தள்ளி விட்டுள்ளனர். இதில், திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது. பலர் நெரிசலில் சிக்கி காயமடைந்து உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
12 பேர் சாவு
இதுபற்றி சமூக சுகாதார மையத்தின் மருத்துவர் கோபால் தத் கூறும்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்து உள்ளனர். 13 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் நாராயணா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். எனினும், இந்த எண்ணிக்கை உயர கூடும் என அஞ்சப்படுகிறது.
மோடி இரங்கல்
இதுபற்றி பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
காஷ்மீரில் மாதா வைஷ்ணவி தேவி பவனில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்.
இந்த சம்பவம் பற்றி காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா மற்றும் மந்திரிகள் ஜிதேந்திரா சிங் மற்றும் நித்யானந்தராய் ஆகியோருடன் பேசியுள்ளேன். தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி கூறியுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.