கண்ணாயிரத்தை விரட்டிசென்ற சிறுமி/ நகைச்சுவை சிறுகதை
1 min read
Kannayiram chased the girl away/ Story by Thabasukumar
2.1.2021
கண்ணாயிரம் யூரின் டெஸ்ட் மற்றும் மோசன்டெஸ்ட் எடுக்க மனைவி பூங்கொடியுடன் ஆட்டோவில்ஏறிச் சென்றார். ஆட்டோக்காரர் நான்கு பிள்ளைகளை தத்தெடுத்து வளர்ப்பதாக கூறியதை கேட்டதும் கண்ணாயிரத்துக்கும் நாமும் ஒருகுழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம் என்று ஒரு எண்ணம் தோன்றியது. ஆனால் சிறுவன் சுரேசால் நடந்த பஞ்சாயத்தை நினைத்ததும் நெஞ்சு பகீரென்றது. நாம தத்தெடுத்து வளர்த்தால் ஒரு பய நம்பமாட்டான். கண்ணாயிரம்.. அப்படி, இப்படி ன்னு கதைகட்டிவுட்டுறுவானுக.. நமக்கு அதுசரிப்பட்டுவராது என்று சிந்தித்தபடி கண்ணாயிரம் ஆஸ்பத்திரிக்குள் சென்றார்.
கண்ணாயிரத்துக்கு யூரின் டெஸ்ட்டு, மோசன்டெஸ்ட் டு ஆகியவைகளுக்குரிய சமாச்சாரங்களை பாட்டிலிலும், டப்பாவிலும் ஒருபையில் எடுத்துவந்த கண்ணாயிரம் மனைவி ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் கொடுத்தார். யூரின்டெஸ்ட்டு, மோசன் டெஸ்ட்டு பண்ண வேண்டும் என்று சொன்னார்.
உங்க பெயர் சொல்லுங்க என்று ஊழியர் கேட்க அவர் பூங்கொடி என்றார். உங்களுக்கு யூரின் டெஸ்ட்டு, மோசன்டெஸ்ட் எடுக்கணுமா. உங்களுக்கு என்ன செய்யுது என்று பூங்கொடியிடம் கேட்டார்.
அதற்கு அவர், எனக்கு ஒண்ணும் செய்யல.. என்கணவருக்குதான் அடிக்கடி கோபம் வருது, ஞாபக சக்திகுறைஞ்சு போச்சு, அதனால அவருக்கு சுகர் இருக்குமென்று சந்தேகப்படுறேன். அதனால டெஸ்பண்ணவந்திருக்கோம் என்றார்.
உடனே ஊழியர் உஷாராக.. டெஸ்டு உங்களுக்கில்லையா, உங்க கணவருக்கா..அதைஒழுங்கா செல்லக்கூடாதா..உங்க கணவர் பெயர் என்ன என்று கேட்டார். அதற்கு அவர் கண்ணாயிரம் என்று சொல்ல ஊழியர் குறித்துகொண்டார். கண்ணாயிரத்துக்கு திடீரென்று சந்தேகம் வந்தது. வேறுயாராவது கண்ணாயிரம் என்கிறபெயரில் வந்துவிட்டால் டெஸ்ட்டு மாறிபோயிட்டா என்ன பண்ணுறது.. எயிட்ஸ், கியிட்ஸ்ன்னு பெரிய, பெரிய நோயை சொல்லிப்புட்டா என்ன செய்யிறது. அதனால என் பெயரை திரு.பெரிய கண்ணாயிரமுன்னு எழுதிக்கீங்க என்று கண்ணாயிரம் சொன்னார்.
அது என்ன திரு அது உங்க இனிஷியலா என்று ஊழியர் கேட்க.. கண்ணாயிரம் ஆ.. அது இனிஷியல் இல்லை. ஒரு உயர்வா, ஒருமரியாதையா சொல்லுறது என்று கண்ணாயிரம் சொன்னார்.
ஊழியர் அவரை ஒருபார்வை பார்த்தார். மரியாதையாம், மரியாதை என்று அவர் கேட்பது போல் இருந்தது. கண்ணாயிரம் கண்களை மூடிக்கொண்டார். ஆஸ்பத்திரி ஊழியர் மெல்ல சிரித்தபடி சரி, ஒரு இரண்டு மணி நேரம் கழிச்சு வாங்க. டெஸ்ட்டு ரிசல்ட் வந்துடும் என்றார்.
பூங்கொடி அவரிடம் எனக்கு காலில் பீங்கான் குத்திட்டு அதுக்கு மருந்து போடணுமுன்னு சொன்னார். அதற்கு அவர் அடுத்த அறையைகாட்டி அங்கே போங்க என்று சொன்னார். கண்ணாயிரமும் பூங்கொடியும் அந்த அறைக்கு சென்றனர். அங்கு பூங்கொடி காலில் பீங்கான் குத்திய பகுதியை துடைத்து சுத்தம் செய்து மருந்து போட்டு துணியால் கட்டிவிட்டார்கள். பூங்கொடிக்கு லேசா வலித்தது. டெஸ்ட்டு ரிசல்ட் வர இரண்டுமணிநேரம் ஆகும். அதுவரைக்கும் என்ன செய்யலாம் என்று கண்ணாயிரம் யோசித்தார். இங்கே இருந்தால் மருந்துவாடை மயக்கம் வரும் என்றார் கண்ணாயிரம்.
உடனே பூங்கொடி, சரிங்க.. பக்கத்திலே ஒருபூங்கா இருக்கே. அங்கே போவோம்.. என்றார்.
கண்ணாயிரமும் சரி என்று சொல்ல, இருவரும் பூங்காவை நோக்கி நடந்தார்கள். பூங்கொடி மெல்ல, மெல்ல நடந்தார்.
கண்ணாயிரம் தோளில் நீள துண்டு போட்டிருந்தார். அவர் வேகமாக நடந்தபோது துண்டு நழுவி கீழேவிழுந்தது. உடனே அந்த துண்டை எடுத்து உதறிவிட்டு துண்டை கழுத்தில் மாலைமாதிரிபோட்டுக்கொண்டார். இனி கீழேவிழாது என்று சொல்லியவாறு பெருமிதத்துடன் நடந்தார்.
சிறிது நேரத்தில் பூங்கா வந்தது. அதிக கூட்டம். சிறுவர், சிறுமிகள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். கண்ணாயிரத்துக்கும் பூங்காவில் ஓடி விளையாடவேண்டும் போலிருந்தது. பூங்கொடி வேகமாக நடக்கமுடியாததால் பூங்காவில் இருந்த சிமெண்டு பெஞ்சில் உட்கார்ந்தார். பூங்காவில் குழந்தைகள் விளையாடும் அழகை ரசித்தார். கண்ணாயிரம் பூங்காவை சுற்றிபார்த்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு புறப்பட்டார். சீக்கிரம் வந்திருங்க..என்று பூங்கொடி சொன்னார். கண்ணாயிரம் சரி என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தார்.
கழுத்தில் மாலைபோல்தொங்கவிட்டிருக்கும் துண்டின் இருபகுதிகளையும் கட்டியாகபிடித்தபடி சென்றார்.
பூங்காவில் பூத்துகுலுங்கிய பூக்களின் வாசம் அவரைமயக்கியது. சில்லென்று வீசிய தென்றல் அவரை சிலிர்க்கவைத்தது. பறவைகளின் இனிய குரலோசை அவருக்கு பரவசத்தை ஏற்படுத்தியது. ஆ. ஹா.. என்ன அழகு, என்ன அழகு என்று ரசித்தார். மரத்தில் பூக்கள் பூத்திருந்தன. குதித்து, குதித்து அந்த பூக்களை பறிக்கமுயன்றார். முடியவில்லை. மரத்தில் ஏறினார். எறும்புகடித்ததால் பாதியிலேயே இறங்கினார். ஆனாலும் அந்த பூமேல் உள்ள ஆசை குறையவில்லை. கீழே கிடந்த ஒரு கம்பை எடுத்து மரத்தில் உள்ள பூக்களை தட்டினார். வெள்ளை நிற பூக்கள்கீழே விழுந்தது. குனிந்து அந்த பூக்களை எடுத்தார். அதை மனைவியிடம் கொடுக்க வேண்டும் என்று நினைத்து நடக்க முயன்றபோது யாரோ வேட்டியை பின்னால் இருந்து இழுப்பது போலிருந்தது. கண்ணாயிரம் திடுக்கிட்டு திரும்பிய போது, மூன்று வயது சிறுமி அப்பா என்று அழைத்தாள். அதை கேட்டதும் கண்ணாயிரத்துக்கு தூக்கிவாரிப்போட்டது. ஆ.. இது என்ன சோதனை.. நான் உன் அப்பா இல்லம்மா.. வேட்டியை விடும்மா என்றார். அது விடவில்லை. இது என்ன வம்பாபோச்சு.. என்று கூறியவாறு வேட்டியை கெட்டியாக பிடித்திருந்த சிறுமியின் கைகளை அகற்றினார். அந்த சிறுமி.. ஓ என்று அழுதது. உடனே கண்ணாயிரம் தன் கையிலிருந்த ஒரு பூவை எடுத்து அந்த சிறுமியிடம் நீட்டினார். அந்த சிறுமி பூவைவாங்கி கீழேபோட்டுவிட்டு.. மீண்டும் அப்பா என்று அழுதது. அப்போது அங்கே வந்த ஒருவர், ஏங்க பெத்த பிள்ளையை அழவைக்கிறீங்க..அது கேட்கிறதை வாங்கிக்கொடுங்க.. என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.
கண்ணாயிரத்துக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
சிறுமியைபார்த்து, அம்மாடி, நான் உன் அப்பா இல்லம்மா.. என்னை விட்டுடு.. என்று கெஞ்சினார். ஆனால்.. அந்த சிறுமி கண்ணாயிரத்தின் வேட்டியை மீண்டும் பிடித்தபடி அப்பா என்றது. கண்ணாயிரம்.. ம். இது சரிப்பட்டு வராது. ஓடிடவேண்டியதுதான் என்று நினைத்தார். சிறுமியை பார்த்து கொஞ்சம் இரு.. இதோ வந்திடுறேன் னு சொல்லிவிட்டு கண்ணாயிரம் ஓட்டம்பிடித்தார். சிறுமியும் அப்பா, அப்பா என்றபடி அவரை பின்தொடர்ந்து ஓடியது.(தொடரும்)
- வே. தபசுக்குமார். புதுவை.