June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

கண்ணாயிரத்தை கலங்கவைத்த துண்டு/ நகைச்சுவை கதை

1 min read

Towel who came to Kannayiram cry / comedy story By Thabasukumar

5.1.2022

கண்ணாயிரமும், அவரது மனைவி பூங்கொடியும் ஆஸ்பத்திரியில் மோசன்டெஸ்ட், யூரின் டெஸ்டு ரிசல்ட் வர இரண்டுமணிநேரம் ஆகும் என்று சொன்னதால் நேரத்தை கழிப்பதற்காக அருகில் உள்ள பூங்காவுக்கு சென்றனர். துண்டை மாலைபோல் தொங்கவிட்டபடி சென்ற கண்ணாயிரம் மரத்தில் உள்ள பூக்களை கம்பால் தட்டிபறித்துகொண்டிருந்தபோது மூன்று வயது சிறுமி அவரது வேட்டியை பிடித்து இழுத்து அப்பா என்று கத்தியது. இதனால் மிரண்டுபோன கண்ணாயிரம் அந்த குழந்தையிடமிருந்து தப்பிக்க பூங்காவில் அங்கும் இங்கும் வளைந்து, வளைந்து ஓடினார். ஆனால் அந்த குழந்தை விடாமல் அவரை பின்தொடர்ந்து விரட்டிசென்றது.

கண்ணாயிரத்துக்கு பயம்வந்துவிட்டது. இதைபார்க்கும் யாரும் தன்மனைவியிடம் போட்டுகொடுத்துவிடக்கூடாது என்று நினைத்தவர் நேராக தன் மனைவியை நோக்கி ஓடிவந்தார். .என்ன ஆச்சுங்க. .இப்படி ஓடி வர்ரீங்க.. என்று பூங்கொடி கேட்டார். கண்ணாயிரம்.. தன்னை பின்தொடர்ந்து வந்த சிறுமியை காட்டி.. இந்தபொடிசு.. என்னை அப்பான்னு சொல்லி துரத்திக்கிட்டுவருது.. என்று கண்களை கசக்கினார்.
பூங்கொடி..பதட்டத்துடன் அந்த சிறுமியை பார்த்தார். ஏன் அந்த பொடுசு உங்களை மட்டும்.. அப்பான்னு சொல்லி துரத்திக்கிட்டுவருது. நீங்க என்ன தப்பு பண்ணுனீங்க.சொல்லுங்க..என்று கேட்டார். நான் எந்த தப்பும் பண்ணல, பூதான் பறிச்சிக்கிட்டு இருந்தேன்.. அப்பதான் அந்த பொடுசு ஓடிவந்து ச்சு என்றார் கண்ணாயிரம்.
உடனே அந்த சிறுமி கண்ணாயிரத்தின் துண்டை பிடித்து மீண்டும் இழுத்து அப்பா என்றுகத்தியது. அதைபார்த்ததும் பூங்கொடி கோபத்தில் ஏய், யார் நீ, எங்கே வந்த, உன் அப்பா, அம்மா யாரு.. என்று சிறுமியிடம் கேட்டார். அது பதில் சொல்லாமல்.. ஆ.. அப்பா.. ஆ.. அப்பா என்று அழுதது. இது என்ன வம்பாபோச்சு.. ஏய் அழாத பூச்சாண்டிக்கிட்ட பிடிச்சுகொடுத்திடுவோம்.. என்று பூங்கொடி மிரட்டினார்.
கண்ணாயிரம்.. மிரட்டாதே, எனக்கே பயமா இருக்கு.. என்றார். அந்த சிறுமி கண்ணாயிரத்தையும் அந்த துண்டையும் திரும்ப, திரும்ப பார்த்தது.


கண்ணாயிரம் உடனே திரும்பி நின்றுகொண்டார். ஆனாலும் அந்த சிறுமி விடவில்லை. அதுவும் கண்ணாயிரத்தின் முன்பக்கம் ஓடிவந்து நின்று சிரித்தது. கண்ணாயிரம். நாக்கைகடித்து ஓடு அங்கே என்று விரட்டினார். அப்போது பாப்பம்மா என்றபடி ஒருபெண் ஓடிவந்தார். அந்தபெண்ணைபார்த்ததும் சிறுமிஓடிச்சென்று அம்மா என்று கட்டிக்கொண்டது. அதைபார்த்ததும் கண்ணாயிரம் அப்பாட நிம்மதி என்றுபெருமூச்சுவிட்டார். அவர்நிம்மதி ஒருநிமிடம்கூட நீடிக்கவில்லை. அந்த சிறுமி தன்தாயிடம் கண்ணாயிரத்தை காட்டி அப்பா, அப்பா என்றுகத்தியது.
பூங்கொடிக்கு கோபம்கோபமாக வந்தது. சிறுமியின் தாயை பார்த்து என்ன புள்ள வளர்த்திருக்கீங்க. கண்டவங்களையும் பார்த்து அப்பா, அப்பான்னு கத்துது என்று சொன்னார்.
அதற்கு அந்தபெண், மன்னிச்சுக்கங்க அம்மா, அவங்க அப்பா எப்போதும் துண்டை மாலைமாதிரி போட்டிருப்பாரு. அவங்க அப்பா மாதிரி இவரும் துண்டை மாலை மாதிரி போட்டியிருந்ததாலே இவர அப்பா, அப்பான்னு கூப்புடுறா.. இப்படித்தான் ஒரு கலியாணவீட்டுக்கு போயிருந்தோம்.. மாப்பிளை மாலை மாதிரி துண்டை போட்டுட்டு நின்னாரு. அவரைபாத்து அப்பான்னு கத்திட்டா..கலியாணமண்டபத்திலே ஒரே ரகளையாகிபோச்சு.. பொண்ணு வீட்டுக்காரர்களை சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. என்றார்.

அந்தசிறுமி மீண்டும் கண்ணாயிரத்திடம் வந்து துண்டை இழுத்து அப்பா என்றது. கண்ணாயிரம் அந்த துண்டை இறுக்கமாகபிடிக்க, சிறுமி மற்றொரு பக்கம் இழுக்க கண்ணாயிரம் கத்த எல்லோரும்வேடிக்கைபார்த்தனர். சிறுமியின் தாயும்சிரித்தபடி துண்டுலதான் ரகசியம் இருக்கு. பேசாம துண்டை கொடுத்துடுங்க.. உங்களைவிட்டுடுவா.. என்றார்.
கண்ணாயிரம்.. ம் எனக்கு துண்டுவேணும்.. நான் தரமாட்டேன் என்றுஅடம்பிடித்தார். சிறுமியும்விடவில்லை. பூங்கொடிக்கு கோபம் வந்தது. கண்ணாயிரத்தைபார்த்து ஏங்க.. துண்டுபோனா போவுதுவுடுங்க. உங்களுக்கு வேறுதுண்டுவாங்கித்தாரேன் என்று சொன்னார்.
கண்ணாயிரத்துக்கு துண்டை இழக்க மனமில்லை.அதைகெட்டியாக பிடித்துகொண்டுஓடமுயன்றார்.அப்போது சிறுமி வேட்டியை பிடித்து இழுக்க. ஆ.. ஆபத்து என்றுகத்தினார். ஏங்கமானம்போகுது துண்டை விடுங்க என்று பூங்கொடி கத்த… கண்ணாயிரம் துண்டை விட்டுவிட்டு வேட்டியை பிடிக்க கீழே சரிந்த துண்டை எடுத்துகொண்டுசிறுமி தன்தாயிடம் ஓடி ம்… இது அப்பா துண்டு என்று சொல்லியது.
கண்ணாயிரம் அது என் துண்டு என்றார். சிறுமியின் தாய் மெல்ல, அவங்க அப்பா துண்டை எடுத்து நீங்க வச்சிக்கிட்டிங்கன்னு அவ நினைக்கிறா..அதான்.கத்துனா..என்று சொன்னார். கண்ணாயிரம் அந்த துண்டை யே பார்த்தார்.
பூங்கொடி அவரிடம்.. அந்த துண்டுவேண்டாம்..விட்டுறுங்க.வாங்க.ஆஸ்பத்திரிக்கு போவோம் என்றார். கண்ணாயிரம்.. ம் துண்டுபோச்சே என்ற ஏக்கத்தில் ஆஸ்பத்திரியை நோக்கி நடக்கதொடங்கினார். செருப்புதான் காணாம போகுதுன்னு செருப்புபோடாம இருந்தேன். துண்டுக்கு ஆபத்துவந்துட்டு. இனிதுண்டும்போடமுடியாதா. புள்ளைன்னா அடிச்சிவளக்கணும். இப்படி. வேட்டியை துண்டை உருவுனா எப்படி.. ரொம்ப மோசம் என்று திட்டியபடிநடந்தார். சும்மா.. புலம்பாம நடங்க என்றார் பூங்கொடி.
கண்ணாயிரம் புலம்புவது நிறுத்தவில்லை. இந்த டெஸ்ட் வேற என்ன சொல்லப்போறாங்களோதெரியல.. அது வேறபயமா இருக்கு என்ன செய்ய.. என்றபடி நடந்துசென்றார். ஆஸ்பத்திரியை இருவரும் நெருங்கினார்கள். டெஸ்டு ரிசல்டுவந்துட்டா என்று ஊழியரிடம் பூங்கொடி கேட்டார். ம். ரெடியா இருக்கு.. டாக்டரை பார்த்து வாங்கிட்டு போங்க.. என்றார். டாக்டர் அறைக்கு இருவரும் நடந்துசென்றார்கள். டெஸ்ட் ரிசல்டை நினைத்ததும் கண்ணாயிரத்துக்கு.. படபடன்னுவந்தது.

  • வே. தபசுக்குமார். புதுவை.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.