4 வயது சிறுவனை கொன்று உடலை பீரோவுக்குள் பூட்டி வைத்த பக்கத்து வீட்டு பெண் கைது
1 min readNext door woman arrested for killing 4-year-old boy and locking body inside bureau
23.1.2022
1½ பவுன் நகைக்காக சிறுவனை கொன்று உடலை பீரோவுக்குள் அடைத்து வைத்த பக்கத்து வீட்டு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சிறுவன் மாயம்
குமரி மாவட்டம் கடியபட்டணம் பாத்திமா தெருவை சேர்ந்தவர் ஜான் ரிச்சர்டு. இவர் சவுதி அரேபியாவில் மீன் பிடித்தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி சகாய சில்ஜா (வயது 28). இவர்களுடைய மகன் ஜோகன் ரிஷி (4). மேலும் 2 மாதமே ஆன பெண் குழந்தையும் உள்ளது.
இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் சிறுவன் ஜோகன் ரிஷி வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்தான். 1.15 மணியளவில் தாயார் சிறுவனை சாப்பிடுவதற்காக அழைக்க சென்றார். அப்போது சிறுவனை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அந்த பகுதி முழுவதும் தேடினார். மேலும் உறவினர்கள் வீடுகளில் தேடிபார்த்தும் மகனை பற்றி எந்தவொரு தகவலும் இல்லாததால் சகாய சில்ஜா பதற்றம் அடைந்தார்.
போலீஸ் விசாரணை
பின்னர் இதுகுறித்து அவர் மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். மாயமான சிறுவன் 1 பவுன் தங்கச்சங்கிலி, ½ பவுன் கைச்சங்கிலி (பிரேஷ்லெட்), வெள்ளி அரைஞாண் கயிறு ஆகியவை அணிந்திருந்தான். எனவே நகைக்காக மர்மநபர்கள் யாராவது கடத்தி சென்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் 2-வது நாளாக நேற்று போலீசார் கடியப்பட்டணத்தில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தினர். அதே சமயத்தில் கடியபட்டணம் கிராம மக்களும் சிறுவனின் நிலை என்னாச்சோ, ஏதாச்சோ? என அனைவரும் பதற்றத்தில் இருந்தனர்.
பக்கத்துவீட்டுப்பெண்
ஆனால் சகாய சில்ஜாவின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் சரோபின் மனைவி பாத்திமா (30) என்பவர் மட்டும் அங்குமிங்கும் நடந்தபடி இருந்தார்.
இதனை கவனித்த கிராம இளைஞர்களுக்கும், போலீசாருக்கும் அந்த பெண்ணின் மீது சந்தேகம் ஏற்பட்டது.
இந்த பரபரப்புக்கு இடையே இளைஞர்கள் அதிரடியாக அந்த பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்தனர். அங்கு சிறுவன் இருக்கிறானா? என அங்குலம், அங்குலமாக தேடினர். அப்போது பீரோ பூட்டப்பட்டிருந்தது. பீரோவை உடைத்து பார்த்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
பீரோவுக்குள் பிணம்
சிறுவன் ஜோகன் ரிஷி, அந்த பீரோவுக்குள் பிணமாக இருந்தான். நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த காட்சியை பார்த்த அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். சிறுவனின் கழுத்து, தலை உள்ளிட்ட சில இடங்களில் காயங்கள் இருந்தது.
இதனை கேள்விபட்டு அங்கு ஓடி வந்த தாய் சகாய சில்ஜா, மகனின் உடலை பார்த்து கதறி அழுதார். இது கல்நெஞ்சையும் கரையவைப்பதாக இருந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் துரிதமாக செயல்பட்டு ஜோகன் ரிஷி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக பாத்திமா மற்றும் வீட்டில் இருந்த அவரது கணவர் சரோபின் ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
நகைக்காக..
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், 1½ பவுன் நகைக்காக பாத்திமா சிறுவனை கொன்று பீரோவில் அடைத்து வைத்த திடுக்கிடும் தகவல் வெளியானது.
நகையை பறித்த பிறகு சிறுவன் அழுததாக தெரிகிறது. இதனால் மாட்டி கொள்வோம் என நினைத்த பாத்திமா, சிறுவனை வீட்டுக்குள் அழைத்து சென்று வாயில் துணியை வைத்து அமுக்கியதோடு, கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார்.
பின்னர் கொலையை மறைக்க பாத்திமா சிறுவனின் உடலை பீரோவிற்குள் பூட்டி வைத்துள்ளார். மேலும் கொலையை திசை திருப்ப சிறுவனின் உடலை கடலுக்குள் வீச திட்டமிட்டிருந்த அதிர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளது. சிறுவனின் வீடு இருந்த பகுதியை சுற்றி இரவு முழுவதும் உறவினர்கள் தென்பட்டதாலும், போலீஸ் கண்காணிப்பினாலும் சிறுவனின் உடலை கடலில் வீசும் முயற்சி தோல்வி அடைந்து போலீசில் சிக்கினார்.
கைது
இதுதொடர்பாக போலீசார் பாத்திமாவை கைது செய்தனர். மேலும் இந்த கொலையை மறைக்க பாத்திமாவுக்கு அவருடைய கணவர் சரோபினும் உதவி செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே அவரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே ஆத்திரமடைந்த பொதுமக்கள் பாத்திமாவின் வீட்டை அடித்து நொறுக்கினர். நகைக்காக சிறுவனை கொன்று பீரோவில் அடைத்த கொடூர சம்பவம் குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.